×
 

காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் வேண்டும்! கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் பேட்டி!

காவிரி நதிநீர் விவகாரம் மற்றும் தொகுதி மறுவரையறை குறித்துத் தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என மு. வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

காவிரி நீர்ப் பிரச்சனை மற்றும் தொகுதி மறுவரையறை விவகாரங்களில் தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாக்க உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்பதே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுதியான நிலைப்பாடு என அக்கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

மத்திய பாஜக அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளைக் கண்டித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆகஸ்ட் 6-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை 'மாற்றத்திற்கான நடைபயணம்' நாடு தழுவிய அளவில் நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக, சென்னை எம்.ஜி.ஆர் நகர் அஜந்தா பேருந்து நிறுத்தம் அருகில் தென் சென்னை மாவட்டக் கட்சிச் சார்பில் நடைபெற்ற நடைபயணப் பரப்புரை இயக்கத்தை மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தொடங்கி வைத்துச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவது, படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்வது, கல்வி மற்றும் மருத்துவச் சேவைகளைப் பூரணமாக அரசுத் துறையின் கீழ் கொண்டுவருவது, உள்நாட்டு நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளித்து நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த நடைபயணம் நடத்தப்படுகிறது என்றார்.

இதையும் படிங்க: நாளை சட்டமன்றம் கூடும் சூழலில் கைது தேவையா? ஆளுங்கட்சிக்கு திருமாவளவன் அறிவுரை!

மத்திய அரசின் போக்கைக் கண்டித்து வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி நாட்டின் தலைநகரான டெல்லியில் பிரம்மாண்ட பேரணி நடைபெறவுள்ளது. இந்த எழுச்சிப் பேரணிக்கு அனைத்துச் சமூக இயக்கங்களும் பேராதரவு அளிக்க வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

நீட் தேர்வு முற்றிலும் தேவையில்லாத ஒன்று. நாட்டின் தலைசிறந்த மருத்துவர்கள் யாரும் நீட் தேர்வு எழுதிப் படித்தவர்கள் அல்ல. நீட் விலக்கு தொடர்பாக நாடாளுமன்றத்தில் தீவிர விவாதம் எழுப்பப்பட வேண்டும்; அதைவிட மேலாக மக்கள் எழுச்சி பெற வேண்டும் என்று குறிப்பிட்டார்.

இந்தியாவின் பெரும் செல்வம் விரல்விட்டு எண்ணக்கூடிய சில பெருமுதலாளிகளிடம் மட்டுமே முடங்கிக்கடக்கிறது. அவர்களிடம் உள்ள செல்வத்தில் மூன்றில் ஒரு பங்கையாவது அரசு மீட்டெடுத்தால் மட்டுமே மத்திய, மாநில பட்ஜெட்டுகளை முழுமையாகச் செயல்படுத்த முடியும். டாக்டர் அம்பேத்கர் உருவாக்கிய ஜனநாயக விவாதக் களங்களை தற்போதைய ஆட்சி அடித்து நொறுக்கிவிட்டது எனக் குற்றம்சாட்டினார்.

தொகுதி மறுவரையறையைப் பொறுத்தவரை தற்போதுள்ள தொகுதிகளின் எண்ணிக்கையே போதுமானது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை காவிரி விவகாரம் மற்றும் தொகுதி மறுவரையறைப் பிரச்சனைகளில் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி ஒருமித்த குரலை எழுப்ப வேண்டும் என்பதே எங்களது பிரதான நிலைப்பாடு என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: காவிரி விவகாரத்தில் மௌனம் ஏன்? உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட இ.ஆர்.ஈஸ்வரன் வலியுறுத்தல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share