"இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைவு!": சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் ஆழ்ந்த இரங்கல்!
இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைவிற்குசிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் திரையுலகில் கிராமிய மண்வாசனையையும் முற்போக்கான கருத்துகளையும் அழுத்தமாகப் பதிவு செய்த 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா அவர்களின் மறைவுக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் அவர்கள் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ இரங்கல் அறிக்கையின் விபரமாவது: "தமிழ் சினிமா வரலாற்றில் '16 வயதினிலே' திரைப்படம் மூலம் அடியெடுத்து வைத்து, மிக அழுத்தமான தடங்களைப் பதித்தவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா. திரையில் உன்னதமான கிராமிய மண்வாசனை மணத்தைக் கொண்டுவந்த பெருமை இவருக்கு உண்டு. தமிழ் சமூகத்தில் நிலவிய சாதியக் கட்டமைப்பு மற்றும் சமூகச் சீர்கேடுகளுக்கு எதிராக 'வேதம் புதிது', 'கருத்தம்மா', 'புதுமைப்பெண்' உட்படப் பல முற்போக்கான மற்றும் புரட்சிகரமான திரை ஆக்கங்களைத் தந்து தமிழ் சினிமாவின் திசையை மாற்றியவர்.
பாரதிராஜா அவர்கள் தன்னுடைய இளம் வயதில் கம்யூனிஸ்ட் இயக்கத்தோடு ஆழமான தொடர்பு கொண்டிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. எப்போதும் ஆழமான சமூக அக்கறையுடன் கூடிய திரைப்படங்களைத் தந்து வந்த அவரது இந்த பேரிழப்பு, ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகிற்குமே ஒரு ஈடுசெய்ய முடியாத பெரும் இழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது இணையர் உள்ளிட்ட குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், ஒட்டுமொத்தத் திரை உலகினருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் எங்களது தார்மீக ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இதையும் படிங்க: திமுக கூட்டணி கிடையாது! ஓப்பனாக உடைத்து பேசிய சிபிஎம் பெ.சண்முகம்!
மேலும், இன்று (ஜூன் 10) குற்றாலத்தில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டத்தில், மறைந்த இயக்குநர் பாரதிராஜா அவர்களின் கலைச் சேவையைப் போற்றும் வகையிலும், அவருக்கு மரியாதை செலுத்தும் வகையிலும் கட்சியின் முக்கியத் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பாரதிராஜாவின் மறைவுச் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, அரசியல் மற்றும் கலை உலகத்தைச் சேர்ந்த பல்வேறு தலைவர்களும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: "திரைப்பட உலகில் அழியாத தடம்.." பாரதிராஜா மறைவுக்கு தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் அர்லேகர் இரங்கல்..!!