×
 

பிஜேபி - அதிமுக கூட்டணியை வீழ்த்துவதே இலக்கு.... நாமக்கல்லில் சிபிஎம் சண்முகம் அதிரடி பேட்டி!

நாமக்கல்லில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPIM) மாநிலக்குழு கூட்டத்திற்குப் பிறகு, அக்கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

நாமக்கல்லில் உள்ள தனியார் ஹோட்டலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கூட்டம் இன்று மாநில செயலாளர் சண்முகம் தலைமையில் நடைபெற்றது. இதில் அகில இந்திய பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மாநில செயலாளர் சண்முகம், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் வியூகம் மற்றும் தமிழக அரசின் நிதி நிலை குறித்துப் பல்வேறு முக்கிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

வரும் சட்டமன்றத் தேர்தலில் பிஜேபி - அதிமுக கூட்டணியைத் தோற்கடிப்பதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கடமையாகும். திமுகவுடன் தொகுதிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காகச் சண்முகம், கண்ணன், கனகராஜ், சாமுவேல் ராஜ் ஆகிய 4 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளைப் பெறுவது என அக்கட்சி முடிவு செய்துள்ளது.

இதையும் படிங்க: மார்ச் தமிழகம் வரும் பிரதமர்.. மதுரை மற்றும் வேலூரில் பொதுக்கூட்டம்! முன்னேற்பாடுகள் தீவிரம்!

தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக மாநில செயற்குழு உறுப்பினர் வாசுகி தலைமையில் குணசேகரன், ரவீந்திரன், சுகுமாரன், முத்துகண்ணன் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு மிகக் குறைந்த உதவித்தொகை வழங்கும் மாநிலமாகத் தமிழ்நாடு உள்ளது. சென்னையில் உதவித்தொகையை உயர்த்தக் கோரிப் போராடிய மாற்றுத்திறனாளிகளைக் கைது செய்து, பேருந்துகளில் பல மணி நேரம் அலைக்கழித்த காவல்துறையின் மனித உரிமை மீறலைக் கண்டிப்பதோடு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

தமிழகத்தின் கடன் அடுத்த ஆண்டு 10.50 லட்சம் கோடி ரூபாயாக உயரும் என நிதி அமைச்சர் 'அபாய சங்கு' ஊதியுள்ளார். இந்த 9.50 லட்சம் கோடி கடனுக்கு திமுக ஆட்சி மட்டுமே காரணம் அல்ல, முந்தைய ஆட்சிகளுக்கும் இதில் பங்கு உண்டு. கடனிலும் அனைவருக்கும் பங்கு இருப்பதை நாணயமான எதிர்க்கட்சியினர் ஒப்புக்கொள்ள வேண்டும். 1.31 கோடி பேருக்கு 6,000 கோடி ரூபாய் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டுள்ளதை வரவேற்கும் அதே வேளையில், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையையும் அரசு உயர்த்த வேண்டும் எனச் சண்முகம் கோரிக்கை விடுத்தார்.

மாநில அரசு கடுமையான நிதிச்சுமையில் இருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், வளர்ச்சி மற்றும் கடன் ஆகிய இரண்டுக்கும் அனைத்து ஆட்சிகளுமே பொறுப்பேற்க வேண்டும் என்று தனது பேட்டியில் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: பாஜக தெருமுனை பிரச்சாரம் பிப்.17 முதல் தொடக்கம்: அண்ணாமலை, எல்.முருகன் பங்கேற்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share