தேமுதிக சார்பில் போட்டியிட விருப்ப மனு ..! கூட்டணியே அறிவிக்காத நிலையில் பிரேமலதா தகவல்..!
தேமுதிக சார்பில் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனுக்கள் கொடுக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு விநியோகம் தொடங்கியுள்ளது. தற்போது தேர்தல் களம் சூடுபிடித்து வரும் நிலையில், தேமுதிக கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த அறிவிப்பின்படி, தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளில் தேமுதிக சார்பில் போட்டியிட ஆர்வமுள்ள தகுதியான நிர்வாகிகள் மற்றும் கழகத் தொண்டர்கள் விருப்ப மனுக்களைப் பெற்றுக் கொள்ளலாம். விருப்ப மனு விநியோகம் பிப்ரவரி 6 ஆம் தேதி நாளை முதல் தொடங்கி பிப்ரவரி 12 ஆம் தேதி வரை நீடிக்கும். பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை பிப்ரவரி 12 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருப்ப மனுக்கள் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் வழங்கப்பட உள்ளன. இதில், பொதுத் தொகுதிகளுக்கு ரூ.15,000 மற்றும் தனித் தொகுதிகளுக்கு ரூ.10,000 என்ற விலையில் விருப்ப மனு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கழக நிர்வாகிகளாக செயல்பட்டு வருபவர்கள் மற்றும் நீண்ட காலமாக கழக வளர்ச்சிக்காக அயராது உழைத்து வரும் உண்மையான தொண்டர்கள் மட்டுமே இதற்கு தகுதி உடையவர்களாக கருதப்படுவர் என்றும் கட்சி தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இபிஎஸ் இப்படி பண்ணலாமா? தேமுதிகவை கைவிடுவது சரியா? அதிமுக மாவட்ட செயலாளர்கள் அப்செட்!
இந்த நடவடிக்கை 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கட்சியின் தயாரிப்புகளின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது. இருப்பினும், தேமுதிக எந்த கூட்டணியுடன் தேர்தலில் களமிறங்கும் என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், கட்சி தனித்து 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துவதற்கான வாய்ப்பை விருப்ப மனு மூலம் திறந்து வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: NDA வுடன் கூட்டணியா? இழுபறி நடக்குதா? பிரேமலதா விஜயகாந்த் விளக்கம்..!