திமுகவினரை குறிவைத்து மிரட்டல்... அன்பில் மகேஷ் வீட்டில் ரெய்டு..! K.N. நேரு தாக்கு..!!
களத்தில் வீரியமாக பணியாற்றும் திமுகவினரை குறி வைத்து மிரட்டல் விடுவதாக கே.என். நேரு தெரிவித்தார்.
திருச்சி தென்னூர் அண்ணா நகரில் உள்ள முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் இல்லத்தில் இன்று அதிகாலையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனையில் இறங்கியுள்ளனர். தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், தரம் உயர்த்துதல் மற்றும் பல்வேறு அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடிக்கும் மேல் லஞ்சம் வசூலித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னை உள்ளிட்ட ஆறு இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடைபெற்று வருகிறது.காலை ஏழு மணிக்கு மேல் தொடங்கிய சோதனையின் போது, வீட்டைச் சுற்றி போலீசார் பாதுகாப்பு வளையம் அமைத்திருந்தனர். இந்த நிலையில், திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தனது ஆதரவாளர்களுடன் அங்கு விரைந்தார். அன்பில் மகேஷை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவிக்க விரும்பிய அவர், போலீசாரால் வீட்டுக்குள் அனுமதி மறுக்கப்பட்டார்.
அதனால் அவர் திரும்பிச் சென்றார். வீட்டு முன் ஏராளமான திமுக தொண்டர்கள் குவிந்திருந்ததால் பகுதியில் பரபரப்பு நிலவியது. செய்தியாளர்களைச் சந்தித்த கே.என்.நேரு, “விஜய் அரசாங்கம் திமுகவில் களத்தில் வீரியமாகப் பணியாற்றும் நபர்களைக் குறிவைத்து வேண்டுமென்றே மிரட்டல் விடுக்கிறது” என்று கடுமையாக விமர்சித்தார். களப்பணியைக் கண்டு அச்சமடைந்ததால் இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: ரெய்டு... ரொம்ப பெருமையா இருக்கு..! K.N. நேரு மகிழ்ச்சியாக பேட்டி..!
இந்த சம்பவம் திருச்சி அரசியல் வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. முன்னதாக கே.என்.நேருவின் வீட்டிலும் சோதனை நடந்த நிலையில், தொடர்ந்து அன்பில் மகேஷ் இல்லத்திலும் இதேபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது கட்சித் தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சோதனை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பகுதியில் போலீசார் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அதிரடி ரெய்டு... K.N. நேரு மீது பாய்ந்த வழக்கு... லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை..!