திமுக கூட்டணியில் மஜக-வுக்கு ஒரு தொகுதி: தமிமுன் அன்சாரி அளித்த 5 தொகுதிகள் விருப்பப்பட்டியல்!
5 தொகுதிகளை விருப்பபட்டியலாக அளித்துள்ளோம், நாளை மீண்டும் அழைப்பதாக கூறி உள்ளனர். இச்சந்திப்பு மனநிறைவாக உள்ளது என தமிமுன் அன்சாரி பேட்டி.
தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டுப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மனிதநேய ஜனநாயக கட்சிக்கு (MJK) ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு, அக்கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அறிவாலயத்தில் திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழுவுடன் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தை மிகவும் சுமூகமாக அமைந்ததாக அவர் குறிப்பிட்டார். "திமுக கூட்டணியில் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. எங்களது கட்சியின் சார்பில் ஐந்து தொகுதிகள் அடங்கிய விருப்பப்பட்டியலை திமுக தலைமையிடம் வழங்கியுள்ளோம். எங்களது கோரிக்கைகளைப் பரிசீலித்துவிட்டு, நாளை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இன்றைய சந்திப்பு மிகுந்த மனநிறைவைத் தருகிறது" என்று தமிமுன் அன்சாரி தெரிவித்தார்.
ஏற்கனவே திமுக கூட்டணியில் இணைந்துள்ள சிறிய கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது போல, மஜக-வும் 'உதயசூரியன்' சின்னத்திலேயே போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: திமுக கூட்டணி அதிரடி: எஸ்.டி.பி.ஐ மற்றும் முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு!
மஜக வழங்கியுள்ள 5 தொகுதிகளில், அவர்கள் வெற்றி வாய்ப்புள்ள ஒரு தொகுதியை திமுக தலைமை நாளை இறுதி செய்து அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படை ஆகிய கட்சிகளுக்குத் தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மஜக-வும் கூட்டணியில் உறுதி செய்யப்பட்டுள்ளது திமுகவின் வாக்கு வங்கியை மேலும் பலப்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
இதையும் படிங்க: வெறிச்சோடிய மேடை: ஓபிஎஸ் பேச தொடங்கியதும் கலைந்த பெண்கள் கூட்டம்!