வெறிச்சோடிய மேடை: ஓபிஎஸ் பேச தொடங்கியதும் கலைந்த பெண்கள் கூட்டம்!
தேனியில் திமுக பொதுக்கூட்டத்தில் சலசலப்பு காத்துக் கிடந்த களைப்பில் பாதியிலேயே கிளம்பிய பொதுமக்கள்!
திமுக சார்பில் நடத்தப்பட்ட "தமிழ்நாடு தலைகுனியாது" என்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உரையாற்றிக் கொண்டிருக்கும் போதே பெண்கள் கூட்டம் கூட்டமாகக் கலைந்து சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் போடி தொகுதியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பெரும்பாலும் காலியான இருக்கைகளுக்கு மத்தியிலேயே ஓபிஎஸ் தனது உரையை நிகழ்த்திவிட்டுச் சென்ற அவலநிலை அரங்கேறியுள்ளது.
போடி தனியார் திருமண மண்டபத்தில் இன்று மாலை 7 மணியளவில் நடைபெறவிருந்த இந்தக் கூட்டத்திற்காக, போடி திமுக நகரச் செயலாளர் புருஷோத்தமன் விரிவான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். இதற்காக அருகிலுள்ள கிராமங்களிலிருந்து நூற்றுக்கணக்கான பெண்கள் மாலை 4 மணி முதலே அழைத்து வரப்பட்டு மண்டபத்தில் அமர வைக்கப்பட்டிருந்தனர். முன்னதாக பெரியகுளம் தொகுதியில் தனது உரையை முடித்துவிட்டு, போடி கூட்டத்திற்கு ஓபிஎஸ் வருகை தர இரவு 7:30 மணிக்கு மேலானது. இதனால் பல மணிநேரம் காத்திருந்த பொதுமக்கள் சோர்வடைந்த நிலையில் காணப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து திமுக நிர்வாகிகள் ஒவ்வொருவராகப் பேசி முடிக்கவே இரவு 8:30 மணி கடந்துவிட்டது. இறுதியாக ஓ.பன்னீர்செல்வம் மைக் பிடித்துப் பேசத் தொடங்கிய அந்தத் தருணத்தில், நீண்ட நேரமாகக் காத்திருந்த பெண்கள் பொறுமை இழந்து கூட்டம் கூட்டமாக மண்டபத்தை விட்டு வெளியேறத் தொடங்கினர். இதனால் அதிர்ச்சியடைந்த மேடையிலிருந்த திமுக நிர்வாகிகள், "தயவுசெய்து அமருங்கள், இன்னும் சற்று நேரத்தில் முடிந்துவிடும்" என ஒலிபெருக்கி வாயிலாகக் கெஞ்சிக் கேட்டுக்கொண்டனர். இருப்பினும், "இருட்டிவிட்டது, கிராமங்களுக்குச் செல்ல வேண்டும்" எனக் கூறிப் பெண்கள் பிடிவாதமாகக் கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: 2026 சட்டமன்றத் தேர்தல்: 175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னம் போட்டி - திமுக மாஸ் பிளான்!
முடிவில், பாதியளவுக்கும் மேல் காலியான நாற்காலிகளைப் பார்த்தவாறே ஓபிஎஸ் தனது உரையைத் தொடர்ந்து, சிறிது நேரத்திலேயே முடித்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினார். சொந்த மாவட்டத்திலேயே, அதுவும் தனது கோட்டையாகக் கருதப்படும் போடியிலேயே ஓபிஎஸ் கூட்டத்திற்குப் பெண்கள் மத்தியில் இத்தகைய வரவேற்பு குறைந்தது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. தாமதமான வருகையும், நீண்ட நேரப் பேச்சுகளுமே இந்தச் சொதப்பலுக்குக் காரணம் என உள்ளூர் உடன்பிறப்புகள் முணுமுணுக்கின்றனர்.
இதையும் படிங்க: 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி! திமுக கூட்டணி குறித்து பிரேமலதா விஜயகாந்த் அதிரடி!