மசோதா என்னவென்றே தெரியாமல் கூட்டம் நடத்துவதா? தவெகவை கிண்டல் செய்த ஆ.ராசா..!!
தவெக அரசு திடீரென தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக மட்டும் எம்.பி.க்கள் கூட்டத்தை அழைத்துள்ளது.
தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் இன்று (ஆகஸ்ட் 8) நடைபெறும் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கலந்தாய்வுக் கூட்டத்தை திமுக கடுமையாக விமர்சித்துள்ளது. இந்தக் கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்த திமுக, மேகதாது அணை விவகாரத்தை முன்னிறுத்தி அரசியல் நாடகம் எனச் சாடியுள்ளது. இந்நிலையில் திமுக எம்.பி. ஆ.ராசா, செய்தியாளர்களிடம் கிண்டலான கேள்வி எழுப்பியுள்ளார்.
“நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் இல்லாத கட்சிகளும் கூட்டம் நடத்தலாம். ஆனால் தொகுதி மறுவரையறை மசோதா குறித்து எதுவுமே தெரியாதவர்கள் கூட்டம் நடத்தலாமா?” என்று ஆ.ராசா கேட்டார். அவரது இந்தப் பதில் திமுக தொண்டர்கள் மத்தியில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
மேகதாது அணைக்கு எதிராக திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்த வேண்டும் என நீண்டகாலமாக வலியுறுத்தி வந்தன. ஆனால் தவெக அரசு திடீரென தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக மட்டும் எம்.பி.க்கள் கூட்டத்தை அழைத்துள்ளது.
இதையும் படிங்க: உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 38 ஆக உயர்வு! மக்களவையில் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றம்!
சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கத்தில் பிற்பகல் 3 மணிக்கு முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், திமுகவின் 30 எம்.பி.க்கள், அதிமுகவின் 4 எம்.பி.க்கள், மக்கள் நீதி மய்யம், தேமுதிக, பாமக ஆகிய கட்சிகளின் எம்.பி.க்கள் பங்கேற்க மாட்டோம் எனப் புறக்கணித்துள்ளனர். காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஎம், ஐயூஎம்எல், மதிமுக ஆகிய கட்சிகளின் சுமார் 20 எம்.பி.க்கள் மட்டும் கலந்துகொள்ள வாய்ப்புள்ளது.
திமுக தரப்பில் கனிமொழி கருணாநிதி அறிக்கை வெளியிட்டு, “மத்திய அரசு தொகுதி மறுவரையறை சட்டத்தை நிறைவேற்றப் போவதாக எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லை. திருத்தப்பட்ட சட்டமுன்வடிவும் கிடைக்கவில்லை. தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை ஏற்கனவே அனைத்துக் கட்சிக் கூட்டத் தீர்மானங்களில் தெரிவித்துவிட்டோம். முந்தைய நிலைப்பாட்டில் இருந்து கட்சிகளை மாற்ற வேண்டுமா? காவிரி பிரச்சினைக்காகப் போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில், மேகதாது அணைக்கு எதிராக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டாமல், காவிரி பிரச்சினையைத் திசைத்திருப்ப தவெக அரசு நடத்தும் நாடகம்தான் இன்றைய கூட்டம்” எனக் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் ஒருமித்த கோரிக்கையை நிராகரித்துள்ள தவெக அரசின் கூட்டத்தில் திமுக பங்கேற்காது எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. தொகுதி மறுவரையறை விவகாரம் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைப் பாதிக்கும் என்ற அச்சம் நீடித்துவரும் நிலையில், இந்த அரசியல் மோதல் மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: நான் பயப்பட மாட்டேன்... இன்னும் நூறு மடங்கு பேசுவேன்! திருச்சி விமான நிலையத்தில் உதயநிதி ஆவேசம்!