அதிமுக பிரமுகர் லாரி ஏற்றிக் கொலை? திமுகவினருக்கு பதவி வெறி தலைக்கேறி விட்டதா? கொந்தளிக்கும் இபிஎஸ்..!
எதிர்க்கட்சியைச் சார்ந்தோரை கொலை செய்யும் அளவிற்கு தி.மு.க.,வினருக்கு பதவி வெறி தலைக்கேறிவிட்டதா? என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கண்டனம் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் அருகே கொல்லம்பரம்பு கிராமத்தை சேர்ந்தவர் முத்து பாலகிருஷ்ணன். அதிமுக முன்னாள் பஞ்சாயத்து தலைவரின் கணவர் ஆவார். முத்து பாலகிருஷ்ணன், அதே பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார்.
இந்த நிலையில், கல்குவாரிக்கு 650 ஏக்கர் நிலம் வாங்கி கொடுத்த விவகாரம் மற்றும் உள்ளாட்சித் தேர்தலில் முன்விரோதம் போன்ற காரணங்களுக்காக முத்து பாலகிருஷ்ணன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த திமுக ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் கருணாகரன் இடையே மோதல் போக்கு நிலவி வந்துள்ளது.
இந்த நிலையில் இன்று (ஜூன் 24) முத்து பாலகிருஷ்ணன் தனது பைக்கில் வெளியே சென்றுள்ளார். சந்திரகிரி அருகே, சென்ற போது கல்குவாரியில் கற்களை ஏற்றிக் கொண்டு வந்த லாரி திடீரென முத்து பாலகிருஷ்ணன் மீது நேருக்கு நேராக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி முத்து பாலகிருஷ்ணன் உயிரிழந்தார்.
இதையும் படிங்க: சாத்தான் வேதம் ஒதுவது போல் உள்ளது... ஸ்டாலினை வெளுத்து வாங்கிய எடப்பாடி பழனிசாமி!!
இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ஒட்டப்பிடாரம் போலீசார், லாரி டிரைவர் சௌந்தரராஜன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் முத்து பாலகிருஷ்ணனை லாரியை ஏற்றிக் கொலை செய்து விடுவேன் என கருணாகரன் கடந்த சில நாட்களுக்கு முன்பு மிரட்டல் விடுத்ததாகவும், அதன்படி அவர் கொலை செய்துவிட்டதாகவும் முத்து பாலகிருஷ்ணனின் உறவினர்கள் குற்றம்சாட்டி வருகினர்.
இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது; தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் அதிமுக நிர்வாகி திரு. முத்துபாலகிருஷ்ணன் அவர்களை, திமுக நிர்வாகி கருணாகரன் உள்ளிட்டோர் லாரி ஏற்றி படுகொலை செய்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இக்கொலைக்கு உள்ளாட்சி தேர்தல் போட்டியும் ஒரு காரணம் என்ன செய்திகள் வருகின்றன.
இதையும் "தனிப்பட்ட கொலை" என்ற அளவோடு தான் ஸ்டாலின் மாடல் திமுக அரசு கடந்து செல்ல முனையுமா? திமுக ஆட்சியில் உள்ளாட்சி தேர்தல் என்பது இவர்களின் அராஜகத்திற்கு இடையில் தான் நடைபெறும் என்பது நாடறிந்த உண்மை. ஆனால், அதற்காக, எதிர்க்கட்சியைச் சார்ந்தோரை கொலை செய்யும் அளவிற்கு திமுக-வினருக்கு பதவி வெறி தலைக்கேறிவிட்டதா?
சட்டம் ஒழுங்கை அடியோடு சீர்குலைத்துவிட்டு, அதை தட்டிக் கேட்கும் இடத்தில் இருக்கும் எதிர்க்கட்சியினரின் உயிருக்கே பாதுகாப்பற்ற நிலையில், தமிழ்நாட்டை படுபாதாளத்திற்கு தள்ளியுள்ள ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். முத்துபாலகிருஷ்ணன் கொலை வழக்கில் தொடர்புள்ள திமுக பிரமுகர் கருணாகரன் உள்ளிட்ட அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ம.செ.கூட்டத்தில் வெளுத்து வாங்கிய எடப்பாடி பழனிசாமி... ஆடிப்போன மாஜி அமைச்சர்கள்...!