×
 

காங்கிரஸிற்கு திமுக கடும் கண்டனம்! அரசியல் முடிவெடுக்க ஸ்டாலினுக்கு முழு அதிகாரம்! எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் தீர்மானம்!

இன்று (07-05-2026) நடைபெற்ற திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் நான்கு முக்கியத் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டிற்குக் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டதோடு, ஆட்சி அமைப்பது குறித்த முக்கிய முடிவுகளை எடுக்கத் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முழு அதிகாரம் வழங்கித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திமுக கூட்டணியில் இருந்து விலகி, மாற்று அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் முடிவை திமுக வன்மையாகக் கண்டித்துள்ளது. திமுக தலைமையிலான கூட்டணியில் 28 தொகுதிகளையும், ஒரு மாநிலங்களவை இடத்தையும் பெற்று வெற்றி பெற்ற பிறகு, மூன்றே நாட்களில் மாற்று அணிக்கு மாறியது காங்கிரஸ் கட்சியின் பழைய குணத்தையே காட்டுகிறது எனத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

புதுச்சேரியில் திமுக-விற்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிட்டதும், அதற்கு அக்கட்சித் தலைமை வாழ்த்துத் தெரிவித்ததும் மாபெரும் துரோகம் என திமுக சாடியுள்ளது. பாஜக பல மாநிலங்களில் எதைச் செய்கிறதோ, அதையே காங்கிரஸ் தமிழ்நாட்டில் நமக்குச் செய்துள்ளது" என்று தீர்மானம் 4-ல் மிகக் கடுமையான விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: காங்கிரசுக்கு பாஜக கடும் கண்டனம்.. தவெக-விற்கு ஆதரவு தெரிவித்ததால் தமிழக அரசியலில் பரபரப்பு!

தற்போதைய தொங்கு சட்டமன்றச் சூழலில், அடுத்து எடுக்க வேண்டிய அரசியல் மற்றும் நிர்வாக முடிவுகளுக்காகப் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழ்நாடு மற்றொரு தேர்தலுக்குத் தயாராக இல்லாத நிலையில், மாநிலத்தில் ஒரு நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்பதே திமுகவின் முதன்மை நோக்கம். திராவிடக் கொள்கைகளுக்கு ஊறுவிளைவிக்கும் மதவாத சக்திகள் காலூன்றுவதைத் தடுக்க வேண்டிய கட்டாயம் திமுக-விற்கு உள்ளது. இத்தகைய நெருக்கடியான சூழலில், உடனடி முடிவுகளை எடுக்கும் முழு அதிகாரத்தைக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்குவதாக ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.

திமுக கூட்டணிக்கு 1.54 கோடிக்கும் அதிகமான வாக்குகள் கிடைத்துள்ளன. வெற்றி பெற்ற கட்சிக்கும் திமுக-விற்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் வெறும் 3.52 விழுக்காடு மட்டுமே என்பதைச் சுட்டிக்காட்டிய இக்கூட்டம், மக்கள் திமுக மீது வைத்துள்ள நம்பிக்கைக்குத் தலைவணங்கி நன்றி தெரிவித்துக் கொண்டது. மேலும், கடந்த ஐந்தாண்டு கால 'திராவிட மாடல்' ஆட்சியில் தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உயர்த்திய மு.க.ஸ்டாலினின் ஆளுமைத் திறனுக்கும் இக்கூட்டம் பாராட்டுத் தெரிவித்தது.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆட்சி அமைக்கத் தயாராகி வரும் வேளையில், திமுகவின் இந்தத் தீர்மானங்கள் மற்றும் காங்கிரஸுடனான உறவு முறிவு தமிழக அரசியலில் மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: தமிழக சட்டசபையை கலைத்தார் கவர்னர் அர்லேகர்: வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share