காவிரி உரிமையை காத்துல பறக்கவிடாதீங்க..! போராட்டம் பெருகும்.. ஸ்டாலின் எச்சரிக்கை..!!
விவசாயிகளின் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் பெருகும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
காவிரி விவசாயிகளுக்காக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் தஞ்சையில் திமுகவினர் திரண்டதாக அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உழவர் பெருமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டம் பெருகும் என எச்சரித்துள்ளார். காவிரி பெருக்கெடுக்க வேண்டிய ஆடிப்பெருக்கு நாளில் டெல்டா விவசாயிகள் ஆதங்கம் பெருக்கெடுக்கப் போராடி வருவதாக கூறியுள்ளார்.
விவசாயப் பெருங்குடி மக்களின் உணர்வுகளை உரக்கச் சொல்லும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தோழமைக் கட்சித் தலைவர்கள் ஜவாஹிருல்லா, தமிமுன் அன்சாரி, நெல்லை முபாரக் ஆகியோருக்கும், அக்கட்சிகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட தோழர்களுக்கும், பல்வேறு விவசாயச் சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைவருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.
ஜூன் 12 வந்து சேர்ந்திருக்க வேண்டிய காவிரி நீர் ஆகஸ்ட் பிறந்தும் வரவில்லை என்றும் ஆடி பதினெட்டில் பொங்கி வரும் புதுப்புனலை வரவேற்ற காவிரிக்கரையின் மைந்தர்கள் “விவசாய விரோதி விஜய் ஆட்சியின் சோம்பேறித்தனத்தால்” சோகத்தில் மூழ்கியுள்ளனர் என ஸ்டாலின் தெரிவித்தார். தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து ஒரு வார்த்தை கூட பேசாத முதலமைச்சரைத் தமிழ்நாடு இப்போதுதான் பார்க்கிறது. அண்டை மாநிலத்தில் திரைப்படம் ஓடுவதற்காக நம் விவசாயிகளின் வாழ்க்கையையா அடகு வைப்பீர்கள் என்றும் கேட்டார்.
இதையும் படிங்க: "வறண்டு கிடக்குது காவிரி... ஜோக்கர் கூட்டமான அமைச்சரவை"..! உதயநிதி கடும் குற்றச்சாட்டு..!!
முழுக் கடன் தள்ளுபடி என வாழைப்பழம் போல வாக்குறுதி தந்து வெற்றி பெற்றுவிட்டு, விவசாயிகளை ஏமாற்றிய மோசடி ஆட்சியாக இந்தத் த.வெ.க. ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது என்றும் மேகதாது அணை கட்டியே தீருவோம் என அடம் பிடிக்கும் கர்நாடகத்துடன் பேச்சுவார்த்தைக்குச் செல்லத் துடியாய்த் துடிக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் நேற்று கர்நாடகத்தில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் பற்றிய செய்திகளைப் பார்த்தாரா? இங்கு அதேபோல் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்ட முதலமைச்சருக்கு நேரமில்லையா? விவசாயிகளைச் சந்திக்காமல் புறக்கணித்துவிட்டு, வேளாண் பட்ஜெட்டைத் திருப்பதிக்குத் தூக்கிக் கொண்டு சென்றால் உங்கள் பாவங்கள் போய்விடுமா? என சரமாரி கேள்விகளை முன் வைத்தார்.
த.வெ.க. அரசு வாக்குறுதியளித்தபடி முழுக் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும்., குறுவை சிறப்பு நிவாரணத் தொகுப்பு வழங்கி, டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவித்திட வேண்டும்., காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையைக் காற்றில் பறக்க விடாமல் தீவிரமாகச் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: "தாரைவார்க்கப்படும் காவிரி உரிமை"..! அனைத்துக் கட்சிக் கூட்டம் எப்போது.? உதயநிதி தலைமையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்..!!