×
 

“திமுக தாமதித்தால் மனக்கசப்புதான் மிஞ்சும்!” கார்த்தி சிதம்பரம் எம்.பி. எச்சரிக்கை!

திமுக மற்றும் காங்கிரஸ் இடையே தற்போது நிலவி வரும் கூட்டணிச் சிக்கல்களுக்கு திமுகவின் தாமதம்தான் காரணம் எனச் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் வெளிப்படையாகக் குற்றம் சாட்டியுள்ளார். 

புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தொகுதிப் பங்கீடு மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். அப்போது பேசிய அவர், 

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி முறையானத் தகவல்களைக் கொண்டுப் பேச முயன்றபோது, ஆளுங்கட்சியினர் அதனைத் தடுத்து அவையை முடக்கியுள்ளனர். பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களால் பிரதமருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்றுச் சொல்லி அவரை அவைக்கு வர வேண்டாம் எனச் சபாநாயகர் கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அப்படியானத் தகவல் இருந்தால் ஏன் இதுவரை விசாரணைக் குழு அமைக்கவில்லை? உண்மையில் நாடாளுமன்றத்தில் அப்படி எதுவுமே நடக்கவில்லை என்பதுதான் யதார்த்தம்.

தமிழக அரசியல் சூழலைப் பொறுத்தவரை, திமுக - காங்கிரஸ் இடையே நிலவும் தற்போதைய மனக்கசப்பிற்கு திமுகவே முழுப் பொறுப்பு. இரண்டு மாதங்களாகியும் கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு திமுக இன்னும் குழு அமைக்காமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை. ராகுல் காந்தியைச் சந்தித்துக் கனிமொழி எம்.பி. பேசி 10 நாட்களுக்கு மேலாகியும் இன்னும் மௌனம் காப்பது கூட்டணிக்குள் குழப்பத்தையே விளைவிக்கும். காங்கிரஸ் கூட்டணியில் இருந்தால் மட்டுமே அது ‘மதச்சார்பற்ற கூட்டணி’ என்ற அந்தஸ்தைப் பெறும். எங்களைக் கூட்டலாகப் பார்க்காமல், கூட்டணியின் பலத்தைப் பெருக்கக்கூடியச் சக்தியாகப் பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க: “நாடாளுமன்றத்தில் பிரதமருக்கே பாதுகாப்பில்லை!” சேலத்தில் கனிமொழி எம்.பி. காட்டம்!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு ஒரு வலுவான வாக்கு வங்கி இருப்பதும், அவருக்கு இளைஞர்களிடையேப் பெரும் ஆதரவு இருப்பதும் உண்மைதான். அவரது ரசிகர்கள் தொண்டர்களாக மாறலாம். ஆனால், அந்த வாக்குகள் தேர்தலின்போதுத் தொகுதிகளில் வெற்றியை ஈட்டித் தந்து, அவை சட்டமன்ற இடங்களாக  மாறுமா என்பது ஒரு பெரிய கேள்விக்குறிதான். விஜய் மீதான வருமான வரித் தீர்ப்பு தேர்தலைப் பாதிக்காது; இது ஊழல் கிடையாது, வரி விவகாரம்தான். வரியைக் கட்டிவிட்டால் அந்தப் பிரச்சனை முடிந்துவிடும்.

திமுக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டுப் பேரின் இணைந்தச் செயல்பாடே வரும் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைத் தேடித்தரும். இனியும் தாமதிக்காமல் திமுக பேச்சுவார்த்தைக் குழுவை அமைக்க வேண்டும்; இல்லை என்றால் மனக்கசப்புகள் மேலும் அதிகமாகத்தான் செய்யும் என்று அவர் எச்சரித்தார்.

இதையும் படிங்க: ஸ்டாலின் கனவு உலகத்தில் இருக்கிறார்! கோவையில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. பேட்டி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share