×
 

விசாரணை கைதியை முடி வெட்ட கட்டாயப்படுத்த கூடாது! உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

மத நம்பிக்கைக்காக தலைமுடி வளர்க்கும் விசாரணைக் கைதியை முடியை வெட்டுமாறு சிறை நிர்வாகம் கட்டாயப்படுத்த கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மத நம்பிக்கையின் அடிப்படையில் தலைமுடி வளர்த்து வரும் விசாரணைக் கைதிகளை, மற்ற கைதிகளுக்குச் சுகாதாரப் பாதிப்பு ஏற்படாத வரை தலைமுடியை வெட்டுமாறு சிறை நிர்வாகம் கட்டாயப்படுத்தக் கூடாது என்றும், தமிழ்நாடு சிறை விதிகளின்படி வழங்கப்பட்டுள்ள விலக்குகளைச் சிறைத்துறை அதிகாரிகள் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை திட்டவட்டமாக உத்தரவிட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பேபி கமலம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அம்மனுவில், பாளையங்கோட்டை மத்திய சிறையில் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டுள்ள எனது மகன் ஜேம்ஸ் செல்லத்துரை, தனது தீவிர மத நம்பிக்கையின் அடிப்படையில் தலைமுடியை வளர்த்து வருகிறார்; ஆனால், அவரது தலைமுடியை வெட்டவும் மீசையை அகற்றவும் சிறைத்துறை நிர்வாகம் தொடர்ந்து வற்புறுத்தி அச்சுறுத்தி வருகிறது. இதுதொடர்பாகச் சிறை அதிகாரிகளிடம் நேரில் மனு அளித்தும் எவ்வித பயனும் இல்லாததால், மகனின் தலைமுடியை வெட்டுமாறு கட்டாயப்படுத்தக் கூடாது என உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா மற்றும் பி. முருகேசன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சிறை வளாகத்தில் தூய்மை மற்றும் சுகாதாரத்தைப் பராமரிக்கும் வகையில் தமிழ்நாடு சிறை விதிகளின்படி கைதிகளின் தலைமுடி, நகங்கள் உள்ளிட்டவற்றை ஒழுங்குபடுத்த அதிகாரிகளுக்கு முழு அதிகாரம் உள்ளது; இருப்பினும், குறிப்பிட்ட கைதியின் தலைமுடி வளர்ப்பால் மற்ற கைதிகளின் பொதுச் சுகாதாரத்திற்குப் பாதிப்பு ஏற்பட்டால் மட்டுமே விதிகளின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அதுவரை தலைமுடியை வெட்டுமாறு சிறை நிர்வாகம் அவரை எவ்விதத்திலும் கட்டாயப்படுத்தாது எனவும் உத்தரவாதம் அளித்தார்.

இதையும் படிங்க: "சேகர்பாபுலாம் பெரியார் பத்தி பேசவே கூடாது"..! சட்டப்பேரவையில் புயலை கிளப்பிய ஆதவ்..!!

அரசு தரப்பு வாதத்தைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், தமிழ்நாடு சிறை விதிகளின் விதி 213(3)-இன் கீழ் மதக் காரணங்களுக்காகத் தலைமுடி வெட்டுவது, மீசையை ஒழுங்குபடுத்துவது அல்லது மொட்டையடிப்பதில் இருந்து தெளிவான விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டினர். எனவே, சிறை நிர்வாகம் இச்சட்ட விதியை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும், பொதுச் சுகாதாரப் பாதிப்பு இல்லாதவரை மத நம்பிக்கைக்காக முடி வளர்க்கும் விசாரணைக் கைதியை வற்புறுத்தக் கூடாது எனவும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.


 

இதையும் படிங்க: தேர்தல் வழக்குகளுக்கு எதிர்ப்பு..! குழந்தைகளை வைத்து பிரச்சாரமா.? ஹைகோர்ட்டில் முதல்வர் மறுப்பு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share