குற்றவாளிகளுக்கு கருணை காட்ட கூடாது! டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் ஆளுநருக்கு மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை!
மருத்துவர் எஸ் டி சுப்பையா கொலை வழக்கில் குற்றவாளிகளின் கருணை மனுவை நிராகரிக்க வேண்டும் என தமிழக கவர்னருக்கு மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 2013-ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற பிரபல நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் எஸ்.டி. சுப்பையா படுகொலை வழக்கில், தண்டனை விதிக்கப்பட்ட முதல் மற்றும் இரண்டாம் குற்றவாளிகளான பொன்னுசாமி மற்றும் மேரி புஷ்பம் ஆகியோரின் கருணை மனுக்களை உடனடியாக நிராகரிக்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு ஆளுநருக்கு மருத்துவர்கள் சங்கம் சார்பில் விரிவான கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.
முன்னதாக, சென்னை உயர் நீதிமன்றம் அனைத்துக் குற்றவாளிகளையும் விடுதலை செய்து அளித்த தீர்ப்பைத் தவறானது எனக் சுட்டிக்காட்டி ரத்து செய்த உச்ச நீதிமன்றம், குற்றவாளிகள் அனைவருக்கும் ஆயுள் தண்டனையை உறுதிசெய்து அண்மையில் தீர்ப்பளித்தது. இருப்பினும், வயது முதிர்வு காரணமாகப் பொன்னுசாமி மற்றும் அவரது மனைவி மேரி புஷ்பம் ஆகிய இருவர் மட்டும் தண்டனைக் குறைப்பு கோரி தமிழக ஆளுநரை அணுகி விண்ணப்பிக்க உச்ச நீதிமன்றம் தற்காலிக நிவாரணம் வழங்கியிருந்தது.
மருத்துவக் கட்டமைப்பின் பாதுகாப்பையும், மருத்துவர்களின் கண்ணியத்தையும் நிலைநிறுத்தும் நோக்கிலேயே இந்த முறையீடு செய்யப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட மருத்துவர் எஸ்.டி. சுப்பையா சாதாரண நபர் அல்லர்; அவர் 5,000-க்கும் மேற்பட்ட சிக்கலான மூளை அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாகச் செய்து ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு மறுவாழ்வு அளித்த தமிழகத்தின் தலைசிறந்த நரம்பியல் நிபுணராவார்.
இதையும் படிங்க: போதையற்ற தமிழ்நாடு விழிப்புணர்வு பயணம்! ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தொடங்கி வைத்தார்!
தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் தாங்கள் பணிபுரியும் மருத்துவமனைகளிலேயே வன்முறை, அச்சுறுத்தல் மற்றும் மிரட்டல்களைத் தொடர்ந்து சந்தித்து வரும் சூழலில், திட்டமிட்டு கூலிப்படையை வைத்து நடத்தப்பட்ட இத்தகைய படுகொலையில் தண்டனை பெற்ற குற்றவாளிகளுக்குக் கருணை காட்டுவது, மருத்துவச் சமூகத்தினரிடையே பெரும் பாதுகாப்பற்ற உணர்வை ஏற்படுத்தும்.
அரசமைப்புச் சட்டத்தில் கருணை என்பது உன்னதமான அதிகாரமாக இருந்தாலும், அது நீதியுடன் இணைந்தே செயல்பட வேண்டும். கொடூரக் குற்றவாளிக்குக் காட்டப்படும் தேவையற்ற கருணை, பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் இழைக்கப்படும் பெரும் அநீதியாக மாறிவிடும்.
அறுவை சிகிச்சை அரங்கிற்குள் நுழையும் எந்தவொரு மருத்துவரும் சாதி, மதம், ஏழை, பணக்காரன் என்ற எந்தவொரு பாகுபாடுமின்றி உயிரைக் காப்பதை மட்டுமே முதன்மை கடமையாகக் கொண்டு செயல்படுகிறார்கள். அப்படிப்பட்ட மருத்துவர்களுக்குப் பணிபாதுகாப்பை உறுதி செய்வதும், குற்றவாளிகளுக்குத் தகுந்த தண்டனையைப் பெற்றுத் தருவதும் அரசின் கடமையாகும்.
மருத்துவ சமூகத்தின் நம்பிக்கையைக் காக்கவும், சட்டத்தின் மாண்பை உயர்த்தவும், மறைந்த மருத்துவர் எஸ்.டி. சுப்பையாவின் அளப்பரிய சேவைக்கு மதிப்பளிக்கும் வகையிலும் குற்றவாளிகளின் கருணை மனுவை முழுமையாக நிராகரிக்க வேண்டும் என மருத்துவர்கள் சங்கம் ஆளுநரை மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொண்டுள்ளது.
இதையும் படிங்க: அதிமுகவுக்கு குட்பை... தவெகவில் ஐக்கியம்! முதல்வர் விஜய் முன்னிலையில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்!