தங்க நகை, வெளிநாட்டு டூர்... டாக்டர்களுக்கு மருந்து நிறுவனங்கள் கொடுத்த ‘கவனிப்புக்கு’ மத்திய அரசு செக்!
தமிழகத்தில் மருந்து நிறுவனங்களிடம் இருந்து இதுபோன்ற ‘கவனிப்புகளை’ பெறும் டாக்டர்கள் குறித்து தகவல் கிடைத்தால், விதிமுறைகளின்படி விசாரணை நடத்தி சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
மருந்து தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து டாக்டர்கள் பரிசுப் பொருட்கள், பண உதவி உள்ளிட்ட எந்தவிதமான சலுகைகளையும் பெறக்கூடாது என மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மருந்து நிறுவனங்களின் தயாரிப்புகளை குறிப்பிட்ட பிராண்ட் பெயரில் பரிந்துரைக்க டாக்டர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுவதாக எழுந்த புகார்களை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தையில் ஒரே வகையான மூலப்பொருளை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு நிறுவனங்கள் வெவ்வேறு பிராண்ட் பெயர்களில் மருந்துகளை விற்பனை செய்கின்றன. இதனால், தங்களது நிறுவனத்தின் குறிப்பிட்ட பிராண்ட் மருந்துகளை டாக்டர்கள் பரிந்துரைக்க வேண்டும் என்பதற்காக சில மருந்து நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை வழங்குவதாக புகார்கள் எழுந்துள்ளன.
குறிப்பாக விலை உயர்ந்த பரிசுப் பொருட்கள், பண உதவி, வெளிநாட்டு சுற்றுலா உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இதுபோன்ற நடவடிக்கைகள் நோயாளிகளின் மருத்துவச் செலவை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மருத்துவத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: தமிழகத்தில் 6 மாதங்களில் 4.68 லட்சம் பேருக்கு நாய்க்கடி... 24 பேர் பலி! அதிர்ச்சி ரிப்போர்ட்!
இதையடுத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்கள், மருந்து நிறுவனங்களிடம் இருந்து பரிசுப் பொருட்கள் அல்லது பண உதவி பெறுவதை தவிர்க்க வேண்டும் என மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், இதுபோன்ற செயல்களில் டாக்டர்கள் ஈடுபடுவது தெரியவந்தால், சம்பந்தப்பட்ட மாநில மருத்துவ கவுன்சில் மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் அதிகாரிகள் கூறுகையில், சந்தைக்கு புதிதாக அறிமுகமாகும் விலை உயர்ந்த மருந்துகளை பரிந்துரைக்க சில டாக்டர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுவதாக புகார்கள் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
ஒரு குறிப்பிட்ட மருந்தின் மருத்துவத் தேவையை விட, பரிசு அல்லது வேறு சலுகைகளின் அடிப்படையில் அதன் பரிந்துரை அதிகரித்தால், இறுதியில் அதன் சுமை நோயாளிகளுக்கே செல்லும் என்பதால் இதுபோன்ற நடைமுறைகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் மருந்து நிறுவனங்களிடம் இருந்து இதுபோன்ற ‘கவனிப்புகளை’ பெறும் டாக்டர்கள் குறித்து தகவல் கிடைத்தால், விதிமுறைகளின்படி விசாரணை நடத்தி சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
மருத்துவம் என்பது நோயாளியின் நலனை முதன்மையாகக் கொண்ட துறையாக இருக்க வேண்டும் என்ற நிலையில், டாக்டர்கள் மற்றும் மருந்து நிறுவனங்களுக்கு இடையிலான நிதி அல்லது பரிசு தொடர்புகளை கட்டுப்படுத்த மத்திய அரசின் இந்த உத்தரவு முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: தமிழகத்தை உலுக்கிய கிட்னி திருட்டு வழக்கில் புதிய திருப்பம்! தனியார் மருத்துவமனைகளுக்கு சிக்கல்?