×
 

இப்போது வந்தவர்கள் இந்த இயக்கத்தை அசைத்துவிட முடியாது.. பெரியார் திடலில் கி.வீரமணி அதிரடி!

புதிதாக அரசியலுக்கு வந்தவர்கள் திராவிட இயக்கத்தை அசைத்துவிட முடியாது; இது பெரியார் மண் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

இப்போது புதிதாக அரசியல் களத்திற்கு வந்தவர்கள் எல்லாம் இந்தத் திராவிட இயக்கத்தை அசைத்துவிடலாம் என்று நினைக்கிறார்கள்; ஆனால் அப்படி எதையும் செய்துவிட முடியாது. இந்த இயக்கத்தின் வரலாறும், சாதனையும், இதற்காக உழைத்தவர்களின் வரலாறும் மிகப்பொரியது என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி மிகக் காட்டமாகப் பேசியுள்ளார்.

சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற 'விடுதலை' நாளிதழின் 92-வது ஆண்டு விழா மற்றும் சுயமரியாதைச் சுடரொளிகள் வில்லிவாக்கம் குணசீலன் - தங்கமணி ஆகியோரின் படத்திறப்பு விழாவில் கலந்துகொண்டு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி மேடையில் உரையாற்றினார். 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் சூழலில், திராவிட இயக்கங்களுக்கு எதிராக எழுந்துள்ள புதிய அரசியல் சக்திகள் குறித்து அவர் தனது கடுமையான விமரிசனங்களை முன்வைத்தார்.

அப்போது மேடையில் அனல் பறக்கப் பேசிய கி.வீரமணி, "வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் கலந்து வருவது போலத்தான் அரசியலில் வெற்றியும் தோல்வியும். திராவிடர்கள் விழுவது முக்கியமல்ல, விழுந்த அடுத்த கணமே எப்படி எழுந்து நிற்கிறோம் என்பதுதான் முக்கியம். 'விடுதலை' நாளிதழ் என்பது வெறும் கட்சிப் பத்திரிகை அல்ல; அது கொள்கைக்கான பத்திரிகை, ஒரு பெரிய ஆயுதம். விஞ்ஞானத்தை யாராலும் எப்படித் தடுக்க முடியாதோ, அதேபோலப் பெரியாரையும் யாராலும் தடுத்துவிட முடியாது" என்று பிரகடனப்படுத்தினார். மேலும் தற்போதைய தவெக அரசின் 'சிங்கப்பெண்' திட்டம் உள்ளிட்ட நிகழ்வுகளை மறைமுகமாகச் சுட்டிக்காட்டிய அவர், "தற்போது சிங்கப் பெண்கள் எல்லாம் எப்படி இருக்கிறார்கள் என்பது இப்போது எல்லாருக்கும் நன்றாகவே தெரியும்" என்று எள்ளி நகையாடினார்.

 

இதையும் படிங்க: மாற்றம் தவிர்க்க முடியாதது, மக்கள் தான் எப்பொழுதும் நீதிபதிகள்.. நடிகர் சிவக்குமார் பேச்சு!

தொடர்ந்து பேசிய அவர், தவெக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியையும் விட்டுவைக்கவில்லை. "காங்கிரஸ் கட்சி இன்றைக்குத்தான் கோளாறு பண்ணுகிறது என்று யாரும் நினைக்காதீர்கள்; அன்றைய காலத்திலேயே அவர்கள் இதையெல்லாம் செய்திருக்கிறார்கள்" என்று வரலாற்றைக் குறிப்பிட்டுச் சாடினார். "தமிழ்நாடு என்பது பெரியார் மண். இந்த இயக்கம் வரலாற்றுச் சிறப்புமிக்கது. புதியவர்கள் யாரும் இதனை அசைக்க முடியாது" என்று கி.வீரமணி பேசிய பேச்சு, தற்பொழுது தவெக மற்றும் திராவிடர் கழகத் தொண்டர்களிடையே சமூக வலைத்தளங்களில் விவாதப் புயலைக் கிளப்பியுள்ளது.

 

இதையும் படிங்க: "இந்து மதத்தைக் கிண்டல் செய்ததால்தான் கடந்த ஆட்சியை மக்கள் புறக்கணித்தார்கள்" - தமிழிசை சௌந்தரராஜன் காட்டம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share