ஓட்ட தெரியாத ட்ரைவர் கையில் தமிழ்நாடு! தவெக அரசை விளாசிய துரைமுருகன்!
எம்.எல்.ஏ-க்களுக்குக் கார் வழங்கும் விவகாரத்தில் தவெக அரசு பக்குவமின்றி செயல்பட்டுள்ளதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.
வளர்ச்சிப் பாதையை நோக்கி மலைப்பாதையில் விரைந்து சென்றுகொண்டிருந்த தமிழ்நாடு என்ற பேருந்தை, வண்டி ஓட்டத் தெரியாத ஒரு டிரைவரை நம்பி ஒப்படைத்திருக்கிறோம்; மேல்நோக்கிச் செல்ல வேண்டிய வாகனம் பாதாளத்தை நோக்கி விரைந்து இறங்கத் தொடங்கிவிட்டது என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மிகக் கடுமையான அரசியல் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையில், அரசியலிலும் அரசு நிர்வாகத்திலும் ஒரு செயலின் மீதான பொதுப் பார்வை (Optics) எவ்வளவு முக்கியமானது என்பதை உணராமல் தவெக அரசு செயல்பட்டு வருவதாகச் சாடியுள்ளார். சட்டமன்றத்தில் 15 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான மக்கள் நல மானியக் கோரிக்கைகள் விவாதிக்கப்பட்ட முக்கியத்துவத்தை மறைத்து, 5 ஆண்டுகளுக்குச் சேர்த்து 150 கோடி ரூபாய் செலவாகும் எம்.எல்.ஏ-க்களுக்குக் கார் வழங்கும் விவகாரத்தைத் தேவையற்ற பேசுபொருளாக்கி, தவெக அரசு தனது தலையிலேயே சாணியைக் கரைத்து ஊற்றிக்கொண்டுள்ளதாகக் கடுமையாகச் சாடியுள்ளார்.
வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் போன்ற அரசு அதிகாரிகளுக்கே வாகனங்கள் இருக்கும்போது, மக்கள் பிரதிநிதிகளான எம்.எல்.ஏ-க்களுக்கு வாகனம் வழங்குவது தவறான விஷயம் அல்ல என்றும், ஆண்டுக்கு 30 முதல் 35 கோடி ரூபாய் என்பது அரசு பட்ஜெட்டில் மிகச் சாதாரணமானது என்றும் அவர் விளக்கியுள்ளார். எனினும், தான் என்ன செய்தாலும் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற மமதையிலும், சரியான அதிகாரிகளின் வழிகாட்டுதல்கள் மற்றும் நிர்வாக அடிப்படைப் புரிதல் இல்லாமலும், 'எடுத்தேன் கவிழ்த்தேன்' என்ற பாணியில் இதனை அணுகிச் சின்னாபின்னமாக்கி விட்டதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க: என்றும் புகழோடு வாழ்வார் சௌகார் ஜானகி! திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இரங்கல்!
இதே விவகாரத்தை திமுக அரசு எப்படிக் கையாண்டிருக்கும் என்பதை விவரித்த துரைமுருகன், "எம்.எல்.ஏ-க்களுக்கு நேரடியாகக் கார்களை வழங்காமல், மாவட்ட நிர்வாகத்திற்கு மக்கள் பணிகளுக்கான கூடுதல் வாகனங்கள் என வழங்கி, பின்னர் அதனை மக்கள் பிரதிநிதிகள் பயன்படுத்தும் வகையில் திட்டமிட்டுச் செயல்படுத்தியிருப்போம்; ஆனால் மக்களின் மனநிலையைப் புரிந்து கொள்ளாத தவெக அரசு ஒட்டுமொத்த நிர்வாகத்தையும் கேலிக் கூத்தாக்கியுள்ளது என்றார். மேலும், வண்டி ஓட்டத் தெரியாதவரைச் சுற்றி நின்று பலரும் தவறான ஆலோசனைகளை வழங்கி வருவதாகவும், யாரை நம்புவது என்று அவர்கள் புரிந்துகொள்வதற்குள் தமிழகத்தின் வளர்ச்சி பல நூறு கிலோமீட்டர் பின்னோக்கிப் போய்விடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இதையும் படிங்க: குருவை சிறப்பு தொகுப்பு..! தவிக்கும் விவசாயிகள்... தவெக அரசுக்கு உதயநிதி கண்டனம்..!!