×
 

என்றும் புகழோடு வாழ்வார் சௌகார் ஜானகி! திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இரங்கல்!

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழ் உள்ளிட்ட தென்னிந்தியத் திரையுலகில் தனி முத்திரை பதித்த பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு; அவர் ஏற்று நடித்த அழுத்தமான கதாபாத்திரங்களின் மூலம் தென்னிந்திய மக்களின் மனதில் என்றும் புகழோடு நிலைத்து வாழ்வார் என திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தனது ஆழ்ந்த இரங்கலைப் பதிவு செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி தனது தனித்துவமான நடிப்பாற்றலால் பேரறிஞர் அண்ணா, என்.டி. ராமராவ் உள்ளிட்ட பல மாநில முதலமைச்சர்களின் அன்பையும் பாராட்டையும் பெற்றவர் என நினைவுகூர்ந்துள்ளார். மேலும், முத்தமிழறிஞர் கலைஞர் மீது அளவுகடந்த மரியாதையும் அன்பும் கொண்டவராக விளங்கிய அவர், தங்களது குடும்பத்தினரோடும் மிகுந்த நட்போடும் பாசத்தோடும் பழகிய மிகச் சிறந்த மனிதப் பண்பைக் கொண்டவராகத் திகழ்ந்தார் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

இதையும் படிங்க: குருவை சிறப்பு தொகுப்பு..! தவிக்கும் விவசாயிகள்... தவெக அரசுக்கு உதயநிதி கண்டனம்..!!

புதிய பறவை, நீர்க்குமிழி, பாமா விஜயம், மோட்டார் சுந்தரம் பிள்ளை, எதிர்நீச்சல், இரு கோடுகள், தில்லுமுல்லு எனத் தலைமுறை கடந்து பேசப்படும் எத்தனையோ மாபெரும் வெற்றிப் படங்களில் சௌகார் ஜானகி வெளிப்படுத்திய யதார்த்தமான நடிப்பு காலத்தால் அழிக்க முடியாதது என அவர் குறிப்பிட்டுள்ளார். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், திரையுலக நண்பர்களுக்கும், லட்சக்கணக்கான ரசிகர்களுக்கும் திமுக சார்பிலும் தனது குடும்பத்தின் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதாக மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: கார் கொடுத்தால் நிதி நெருக்கடியாம்... அப்போ கார் ரேஸ் மட்டும்..? உதயநிதியை வெளுத்து வாங்கிய தவெக.!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share