×
 

காலையிலேயே பரபரப்பான தமிழகம்.. களத்தில் இறங்கிய அமலாக்கத்துறை.. அதிரடி ரெய்டு..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் மூன்று இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பான புகார்களின் அடிப்படையில் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் இன்று சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். துணை ராணுவப் படையினரின் பாதுகாப்புடன் காலை முதல் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனைகள், மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள தொழிலதிபர்கள் மற்றும் நிறுவனங்களுடன் தொடர்புடையவர்களின் இல்லங்களை மையப்படுத்தியுள்ளன.

சென்னையில் முக்கியமாக இரு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள பழைய வண்ணாரப்பேட்டையில், குளோபல் மார்க்கெட்டிங் நிறுவனத்தின் உரிமையாளர் நசீர் என்பவரது இல்லத்தில் ஆறு அதிகாரிகள் கொண்ட குழு சோதனையில் ஈடுபட்டுள்ளது. நசீர் தொழிலதிபராக செயல்பட்டு வரும் நிலையில், அவரது வீட்டில் நடைபெறும் சோதனை பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதேபோல், ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலையில் டிராவல்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் ஆஸ்மி என்பவரது வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இரு இடங்களிலும் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சட்டவிரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: மம்தா கட்சிக்கு அமலாக்கத்துறை ஷாக்..!! ரூ.440 கோடி வங்கிப் பணம் முடக்கம்..!!

இதேவேளையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் மூன்று இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கறம்பக்குடியைச் சேர்ந்த திமுக நிர்வாகி செல்லையாவின் மகன் திருக்குமரன் வீட்டில் ஏழு பேர் கொண்ட இரண்டு குழுக்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளன. வெல்டிங் பட்டறை நடத்தி வரும் திருக்குமரன், தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இறால் பண்ணையும் நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

மேலும், கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த பயாஸ் என்பவரது வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது. திருச்சியில் டிராவல்ஸ் ஏஜென்சி நடத்தி வரும் பயாஸ் வீட்டில் ஆறு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். புதுக்கோட்டை பெருங்களூரைச் சேர்ந்த பாக்யராஜ் என்பவரது வீட்டிலும் அமலாக்கத்துறை குழு சோதனை நடத்தி வருகிறது. எண்ணெய் ஆலை நடத்தி வரும் பாக்யராஜ் வீட்டிலும் துணை ராணுவ பாதுகாப்புடன் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சோதனைகள் அனைத்தும் சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பான புகார்களின் அடிப்படையில் நடைபெறுவதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. சோதனைக்குப் பிறகு பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள், டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் பிற ஆதாரங்களின் அடிப்படையில் முழுமையான விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நடவடிக்கை தமிழகத்தில் பணப் பரிவர்த்தனை தொடர்பான சட்டவிரோத செயல்பாடுகளுக்கு எதிராக அமலாக்கத்துறை எடுத்துள்ள முக்கிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. 

இதையும் படிங்க: தமிழகம் முழுவதும் 18 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை..!! காரணம் என்ன..??

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share