×
 

எடப்பாடி மோடியின் அடிமை..... தஞ்சையில் அதிமுக, பாஜகவை விளாசிய உதயநிதி!

தஞ்சாவூரில் நடைபெற்ற திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் இளைஞரணி செயலாளரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார்.

சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. தஞ்சாவூரில் நடைபெற்ற இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சிகளையும் மத்திய அரசையும் கடுமையாகச் சாடினார். திருவண்ணாமலையில் வடக்கு மண்டலம், விருதுநகரில் தெற்கு மண்டலம் என வரிசையாகப் புயலைக் கிளப்பிவிட்டு, இன்று டெல்டாவின் இதயமான தஞ்சையில் உங்களைச் சந்திக்க வந்திருக்கிறேன் என்று தனது உரையைத் தொடங்கிய அவர், திமுகவின் அசைக்க முடியாத கோட்டையாகத் தஞ்சை விளங்குவதை பெருமதிப்புடன் சுட்டிக்காட்டினார்.

கடந்த ஜனவரி 26-ஆம் தேதி முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற மகளிர் அணி மாநாட்டை நினைவு கூர்ந்த அவர், இன்று அதே தெருவில் இளைஞரணி காட்டும் எழுச்சி நெக்ஸ்ட் லெவல் அரசியலுக்கு அச்சாரமிட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். கழகத் தலைவர் தன்னை ஒரு டெல்டாகாரர் என்று சொல்வார், நானும் ஒரு டெல்டாகாரன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் என்று உணர்ச்சிவசப்பட்ட அவர், 1968-இல் அண்ணா முதல் இன்று ஸ்டாலின் வரை தஞ்சை மண் திமுகவுக்கு அளித்து வரும் ஆதரவை லேண்ட்மார்க் வெற்றியாக வர்ணித்தார். குறிப்பாக, அதிமுக மற்றும் பாஜக கூட்டணியை 'அடிமைகள் கூட்டம்' என்று விமர்சித்த அவர், எடப்பாடி பழனிசாமி மோடிக்குச் சிறந்த அடிமையாகச் செயல்படுகிறார். மோடி தமிழகத்திற்கு அடிக்கடி வருவார், ஆனால் நிதி மட்டும் வராது என்று பஞ்ச் வைத்தார்.

இதையும் படிங்க: அதிமுக கூட்டணி என் வாழ்வின் மன்னிக்க முடியாத பிழை! ஈரோட்டில் வைகோ உருக்கம்!

நிர்வாகிகள் நியமனம் குறித்துப் பேசிய அவர், இந்தியாவிலேயே 50 லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட வலுவான இளைஞரணி திமுகவிடம் மட்டுமே உள்ளது என்றார். மற்ற கட்சிகள் பூத் கமிட்டி  அமைக்க ஆள் இல்லாமல் திண்டாடும் நிலையில், நாம் 15,000 நிர்வாகிகளுடன் இந்த மண்டலக் கூட்டத்தை ஒரு மாநாடு போலவே நடத்துகிறோம் என்று கெத்து காட்டினார். தமிழக அரசின் சாதனைகளைப் பட்டியலிட்ட அவர், காலை உணவுத் திட்டம், மகளிர் உரிமைத் தொகை போன்ற திட்டங்கள் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தியுள்ளதாகக் கூறினார். குறிப்பாக, மத்திய அரசு நிதி உரிமைகளைப் பறித்தாலும், முதலமைச்சர் அவர்கள் பொங்கல் பரிசு மற்றும் கோடைக்கால நிவாரணம் என கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் ரூ. 9,000 வரை மக்களுக்கு வழங்கியுள்ளார் என்பதை எக்ஸ்க்ளூசிவ் ஆகப் பதிவு செய்தார்.

கூட்டத்தின் இறுதியில், பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் காட்டிய வழியில், தமிழகத்தை டெல்லியிடமிருந்து காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம் என்று தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளுக்கும் மேலாக வெற்றி பெற்று, இரண்டாவது முறையாகத் தலைவர் ஸ்டாலினை முதலமைச்சர் நாற்காலியில் அமர வைப்பதே இளைஞரணியின் ஒரே மிஷன் என்று சூளுரைத்தார். தலைவர் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும் என்ற முழக்கத்துடன் தஞ்சை மண்ணில் தேர்தல் போர் முரசைத் தட்டிச் சென்றார் உதயநிதி.
 

இதையும் படிங்க: அரசியல் களம் சூடுபிடிக்கிறது: முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த கமல்ஹாசன்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share