தமிழ்நாட்டின் சாம்பியன்ஸ்.... 178 விளையாட்டு வீரர்களுக்கு அரசு பணி ஆணை முதலமைச்சர் பாராட்டு!
சென்னையில் நடைபெற்ற 'தமிழ்நாட்டின் சாம்பியன்ஸ்' (Champions of Tamil Nadu) நிகழ்ச்சியில், கடந்த ஐந்து ஆண்டுகளில் விளையாட்டுத் துறையில் தமிழ்நாடு அரசு செய்துள்ள சாதனைகள் மற்றும் வீரர்களுக்கு வழங்கப்பட்ட நலத்திட்டங்கள் குறித்துக் கொண்டாடப்பட்டது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) சார்பில், கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழக விளையாட்டுத் துறை படைத்த சாதனைகளைக் கொண்டாடும் சாம்பியன்ஸ் ஆஃப் தமிழ்நாடு (Champions of Tamil Nadu) நிகழ்ச்சி சென்னையில் இன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், விளையாட்டு வீரர்களின் உழைப்பிற்கும் திறமைக்கும் அங்கீகாரம் வழங்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன.
விளையாட்டு வீரர்களுக்கான 3% இடஒதுக்கீட்டின் கீழ், 62 மாற்றுத்திறனாளி வீரர்கள் உட்பட மொத்தம் 178 பேருக்கு அரசுப் பணி ஆணைகளை முதல்வர் வழங்கினார். பணி ஆணை பெற்ற அனைத்து வீரர்களுடனும் முதல்வர் குழுப் புகைப்படம் எடுத்துக்கொண்டு அவர்களைக் கௌரவித்தார். முன்பு ஒரு வருடம் வரை தாமதமாக வழங்கப்பட்டு வந்த உயரிய ஊக்கத்தொகை, தற்போது வீரர்கள் வெற்றி பெற்றுத் திரும்பிய உடனே வழங்கப்பட வேண்டும் என்ற முதல்வரின் அதிரடி உத்தரவு இக்கூட்டத்தில் நினைவுகூரப்பட்டது.
இதையும் படிங்க: மதுரையின் புதிய அடையாளம்: மேம்பாலத்திற்கு ‘நேதாஜி’ பெயர்.. முதல்வர் அறிவிப்பு!
பாரா குண்டு எறிதல் வீராங்கனை முத்து மீனாவின் தாயார் ஜெயலட்சுமி மேடையில் பேசுகையில், எனது மகளுக்கு அரசு வழங்கிய ஊக்கத்தொகையைக் கொண்டுதான், எனக்கு ஏற்பட்ட புற்றுநோய்க்கு மருத்துவம் பார்த்து நான் உயிர் பிழைத்தேன் எனக் கூறித் தழுதழுத்த குரலில் நன்றி தெரிவித்தார். இதற்குப் பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், எங்களது ஊக்கத்தொகை உங்களைக் காப்பாற்றவில்லை; உங்கள் மகளின் அபாரத் திறமைதான் உங்கள் உயிரைக் காப்பாற்றியுள்ளது என்று கூறி அரங்கையே நெகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.
மாணவர் கோகுல் பாண்டியன் வைத்த கோரிக்கைக்குப் பதிலளித்த துணை முதல்வர், மீண்டும் திமுக ஆட்சியமைந்து எனக்கு இதே துறை வழங்கப்பட்டால், நான் போடும் முதல் கையெழுத்து SDAT மாணவர் விடுதிகளில் ஏ.சி. வசதி செய்வதுதான் என வாக்குறுதி அளித்தார். தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிந்தெடிக் பயிற்சி மையம் மற்றும் கபடி விளையாட்டிற்கு கூடுதல் மையங்கள் அமைப்பது குறித்துப் பரிசீலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. சர்வதேச தரத்திலான நேரு விளையாட்டு அரங்கில் பயிற்சி பெற்றதாலேயே தன்னால் பதக்கங்கள் வெல்ல முடிந்தது என்றும், விளையாட்டு ஒதுக்கீடு மூலம் தனது மருத்துவப் படிப்பு கனவு நனவானது என்றும் நெகிழ்ந்தார்.
4-ஆக இருந்த SDAT மையங்கள் தற்போது 40-க்கும் மேலாக வளர்ந்துள்ளதைப் பாராட்டிய அவர், தேசியப் போட்டிகளில் வென்றாலே வேலை கிடைப்பது மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறினார். 1999-இல் நேரு ஸ்டேடியம் வாயிலில் வாய்ப்புத் தேடி நின்ற தான், இன்று துணை முதல்வர் அருகே அமர்ந்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், இதற்கு உழைப்பே காரணம் என்றும் உற்சாகமாகப் பேசினார்.
இதையும் படிங்க: அரசியல் களம் சூடுபிடிக்கிறது: முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த கமல்ஹாசன்!