Hard disk திருட்டு... "தூர சக்தியை காப்பாற்ற நினைக்குதா பேரசக்தி"..? சிபிஐ விசாரணை நடத்த EPS வலியுறுத்தல்..!!
மின்சார வாரியத்தில் ஹார்ட் டிஸ்குகள் திருடப்பட்டு இருக்கும் நிலையில் சிபிஐ விசாரணை தேவை என எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தினார்.
சென்னை அண்ணாசாலையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் இருந்து முக்கிய ஆவணங்கள் அடங்கிய 18 ஹார்ட் டிஸ்க்கள் மாயமானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைமை அலுவலகத்தில்தான் மாநிலம் முழுவதும் நடைபெறும் மின்சார வாரிய டெண்டர்கள், நிலக்கரி கொள்முதல், மின்சார உபகரணங்கள் வாங்குதல் உள்ளிட்ட முக்கிய நிர்வாக ஆவணங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், டெண்டர்கள் மற்றும் கொள்முதல் தொடர்பான முக்கிய தகவல்கள் சேமிக்கப்பட்டிருந்த 18 ஹார்ட் டிஸ்க்கள் காணாமல் போயிருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஹார்ட் டிஸ்குகள் திருடப்பட்ட விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மின்துறை தலைமை அலுவலகத்தில் முக்கிய விவரங்கள் அடங்கிய 18 Hard Disk-கள் காணவில்லை என செய்திகள் வருகின்றன என்றும் தூயசக்தி என்று சொல்லிக்கொள்ளும் ஆட்சியில் டெண்டர் தொடர்பான தரவுகள் காணாமல் போயிருப்பதை என்னவென்று எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுள்ளார்.
இதையும் படிங்க: கடலூர் அதிமுக அலுவலகம் சூறையாடல்..! அதிரடி திருப்பம்... முன்னாள் அமைச்சர் ஆதரவாளர்கள் பகீர் குற்றச்சாட்டு..!
நடு இரவில் திருடர்கள் வந்து திருட, இது என்ன மந்தையில் இருக்கும் ஆடா என்று கேட்டுள்ள அவர், கண்டிப்பாக இந்த திருட்டில் ஏதோ ஒரு உள்நோக்கம், யாரையோ காப்பாற்றும் சதி இருக்கிறது என உறுதியாக சொல்லலாம் என்றார். தூரசக்தி, ஓரசக்தி என்று சொன்ன கட்சியை காப்பாற்ற முயல்கிறதா இந்த பேரசக்தி என்று விளாசினார். Hard Disk திருட்டு குறித்து முறையான CBI விசாரணை நடத்தப்பட்டு உண்மை வெளிவர வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: எதுக்கு ஊர்ந்து வந்தாரு உங்க தளபதி..? TVK - ADMK வார்த்தைப் போர்..!!