×
 

பெண்கள் உரிமையை பறித்த ஸ்டாலின் கூட்டணியை வீழ்த்துவோம் - திருச்செங்கோட்டில் எடப்பாடி பழனிசாமி அதிரடி!

மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் தமிழகத்தில் போதைப்பொருள் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாமக்கல்லில் உறுதி அளித்துள்ளார்.

தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) வேட்பாளர்களை ஆதரித்து இன்று அனல் பறக்கும் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டார். திருச்செங்கோடு - பரமத்தி சாலையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், நாமக்கல் மாவட்டத்தின் 6 சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்களையும் அறிமுகம் செய்து வைத்து அவர் உரையாற்றினார்.


மத்திய அரசு கொண்டு வந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்துப் பேசிய அவர், பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை நாடாளுமன்றத்தில் தோற்கடித்தது திமுக - காங்கிரஸ் கூட்டணிதான். பெண்களின் கனவைச் சிதைத்து, அவர்களின் உரிமையைப் பறித்த ஸ்டாலின் கூட்டணிக்குத் தமிழகப் பெண்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்."

"திமுக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை. சமூக நலத்துறை அமைச்சரே 24 ஆயிரம் பாலியல் வழக்குகள் பதிவாகியுள்ளதாகக் கூறுகிறார். இதில் 18 ஆயிரம் பேர் சிறுமிகள். இதுதான் திராவிட மாடல் அரசா?" என ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க: இலவசம் தேசத்தை நாசமாக்கிவிட்டது! நாமக்கல்லில் திராவிட கட்சிகளை வறுத்தெடுத்த சீமான்!

தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் இன்று கஞ்சா கரைபுரண்டு ஓடுகிறது. போதைப்பொருட்களால் இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் எதிர்காலம் பாழாகிறது. போதை ஆசாமிகளால் கொலை, கொள்ளை, வன்கொடுமைகள் நடக்காத நாளே இல்லை. கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபானத் தொழிற்சாலைகளைத் திமுக நிர்வாகிகளே நடத்துகிறார்கள். காவல்துறையைக் கண்டு குற்றவாளிகளுக்குப் பயமில்லை, ஏனென்றால் அவர்களுக்கு ஆளுங்கட்சியினர் துணை நிற்கிறார்கள்.

மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றப்படும் முக்கியத் திட்டங்களை அவர் பட்டியலிட்டார். குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ₹2,000 உதவித்தொகை, விலையில்லா ஃப்ரிட்ஜ், மற்றும் 5 லட்சம் பெண்களுக்கு அம்மா இருசக்கர வாகனம் வாங்க ₹25,000 மானியம். கைத்தறி நெசவாளர்களுக்கு 450 யூனிட், விசைத்தறி நெசவாளர்களுக்கு 1,400 யூனிட் விலையில்லா மின்சாரம். விவசாயிகளின் பயிர்க்கடன் மீண்டும் ரத்து செய்யப்படும். ரேஷன் கடையில் தரமான அரிசி, விலையில்லா சமையல் எண்ணெய் மற்றும் பருப்பு வழங்கப்படும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் விலையின்றி வழங்கப்படும்.

நாமக்கல் மாவட்டத்திற்கு அதிமுக ஆட்சியில் செய்யப்பட்ட திட்டங்களை அவர் நினைவு கூர்ந்தார்: நாமக்கல்லில் ₹400 கோடியில் அரசு மருத்துவக் கல்லூரி, சட்டக்கல்லூரி, புதிய சாலைகள், தடுப்பணைகள் என எண்ணற்ற திட்டங்களை வழங்கியது அதிமுக அரசு. ஆனால், திமுக அரசு திட்டங்களைச் செய்யாமல் கொள்ளையடிப்பதிலேயே குறியாக இருக்கிறது.

நாமக்கல் மாவட்டத்தின் 6 தொகுதிகளிலும் போட்டியிடும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை அவர் அறிமுகம் செய்தார்.

குமாரபாளையம்: பி. தங்கமணி (அதிமுக)

திருச்செங்கோடு: சந்திரசேகர் (அதிமுக)

நாமக்கல்: ஸ்ரீதேவி மோகன் (அதிமுக)

பரமத்தி வேலூர்: எஸ். சேகர் (அதிமுக)

சேந்தமங்கலம்: சந்திரசேகரன் (அதிமுக)

ராசிபுரம்: டாக்டர் பிரேம்குமார் (பாஜக - தாமரை சின்னம்)

நாமக்கல் மாவட்டம் எனக்கு எம்பி என்ற அடையாளத்தைக் கொடுத்த மாவட்டம். இங்கு குழுமியிருக்கும் கூட்டமே வெற்றியின் அறிகுறி. இரட்டை இலை மற்றும் தாமரை சின்னங்களுக்கு வாக்களித்து மாபெரும் வெற்றி பெறச் செய்யுங்கள்" என எடப்பாடி பழனிசாமி தனது உரையை நிறைவு செய்தார்.


 

 

இதையும் படிங்க: எங்க ஓட்டு வேணாமா..? நாமக்கல்லில் திமுக வேட்பாளரை ரவுண்டு கட்டிய மக்கள்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share