85 வயது மூதாட்டியை அடித்தே கொன்ற நிர்வாகி.. அதிரடியாக கட்சியில் இருந்து நீக்கிய இபிஎஸ்..!
கொலை வழக்கில் கைதான அ.தி.மு.க. நிர்வாகியை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகேயுள்ள வெட்டிக்காட்டில், கீழத்தெருவை சேர்ந்தவர் முத்துலெட்சுமி. இவருக்கு வயது 85. கணவரை இழந்த இவர் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த ஆனந்த் பாபு, அதிமுக திருவாரூர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி இணை செயலாளராக பதவி வகித்து வருகிறார். இவருடைய தாய் மலர்க்கொடி.
இந்த நிலையில் மலர்கொடிக்கும் மூதாட்டி முத்துலட்சுமிக்கும் வீட்டின் அருகே ஆடு கட்டுவதில் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் தகராறு முற்றிப்போக ஆத்திரமடைந்த அதிமுக திருவாரூர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி இணைச் செயலாளர் ஆனந்த் பாபு மற்றும் அவரது தாய் மலர்கொடி ஆகியோர் மூதாட்டி முத்துலட்சுமியை கட்டையால் தாக்கியுள்ளனர்.
இதையும் படிங்க: அதிமுக பிரமுகர் லாரி ஏற்றிக் கொலை? திமுகவினருக்கு பதவி வெறி தலைக்கேறி விட்டதா? கொந்தளிக்கும் இபிஎஸ்..!
இதில் பலத்த காயமடைந்த முத்துலட்சுமி, மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, மன்னார்குடி காவல்துறையினர் ஆனந்த் பாபு மற்றும் அவரது தாயார் மலர்கொடி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி ஆனந்த் பாபுவைக் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ஆனந்தபாபுவின் தாயார் மலர்கொடியை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நிர்வாகியை கட்சியில் இருந்து நீக்கி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
கழகத்தின் கொள்கை - குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும்; கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், C. ஆனந்தபாபு (திருவாரூர் மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு இணைச் செயலாளர்) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 2024 ரீவைண்ட்: கருணாபுரம் கண்ணீரில் மூழ்கி இன்றோடு ஓராண்டு..! திமுகவை சாடும் இபிஎஸ்..!