“ரீல்.. ரீல்” என சைகை காட்டிய எ.வ.வேலு.. சிரித்த முதல்வர் விஜய்! சட்டசபையில் நடந்த சுவாரஸ்ய தருணம்!!
பரந்தூர் திட்டம் தொடர்பான விவாதத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து, திமுக உறுப்பினர்கள் அவையை விட்டு வெளிநடப்பு செய்தனர்.
தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரின் ஒரு பகுதியாக, இன்று முக்கிய அறிவிப்புகளும், உணர்ச்சிபூர்வமான விவாதங்களும் இடம்பெற்றன. கடந்த 5 ஆம் தேதி தொடங்கிய இந்த அமர்வு தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இன்று அவையில் 110-வது விதியின் கீழ் முதலமைச்சர் ஜோசப் விஜய் மூன்று முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அவற்றில் முதன்மையானது, பரந்தூர் பகுதியில் அமையவிருந்த புதிய விமான நிலையத் திட்டத்தை முற்றிலும் கைவிடுவதாகும். இந்தத் திட்டத்திற்கான மாற்று இடம் விரைவில் தேர்வு செய்யப்படும் என்றும், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தின் விரிவாக்கப் பணிகள் தொடரும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த அறிவிப்புக்கு முன்னதாக பரந்தூர் திட்டம் தொடர்பான விவாதத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து, திமுக உறுப்பினர்கள் அவையை விட்டு வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் அவர்கள் மீண்டும் அவைக்குள் நுழைந்ததைத் தொடர்ந்து, மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் ஆரம்பமானது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல், செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சு, பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, உயர்கல்வி ஆகிய ஆறு துறைகள் தொடர்பான மானியக் கோரிக்கைகள் இன்று விவாதிக்கப்பட்டன.
இதையும் படிங்க: விஜய் வசதிக்காக அலுவலகம் மாற்றமா? அமைச்சர் ஆதவ் சொன்ன முக்கிய காரணம்..!!
இந்தச் சூழலில் திமுக முன்னாள் அமைச்சரும் எம்.எல்.ஏ.வுமான எ.வ.வேலு பேசும்போது, நேரலை ஒளிபரப்பு குறித்த தனது கருத்தை வலியுறுத்தினார். “எதிர்க்கட்சிகள் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும்போது, அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதாகச் சொல்கிறீர்கள். ஆனால் அது நேரலையில் சென்றுவிடுகிறது. அதற்குப் பதிலளிக்க எங்களுக்குப் பேச அனுமதி அளித்தால்தான் நேரலை ஒளிபரப்பு சரியாக இருக்கும். இல்லையெனில் ரீல் கட் ஆகி மேலே போய்விடுகிறது… ரீல்… ரீல்…” என்று சைகைகளுடன் அவர் குறிப்பிட்டார்.
https://youtu.be/cnxqZPI4OVw?si=eN-0keNem78KF8GO
இந்தச் சொற்களையும் சைகைகளையும் பார்த்த முதலமைச்சர் விஜய், திரும்பிப் பார்த்து சிரித்து ரசித்தார். காலையில் திமுக உறுப்பினர்களின் கூச்சலும் வெளிநடப்பும் காரணமாகக் காரசாரமான சூழல் நிலவியிருந்தாலும், வேலுவின் இந்தக் கருத்துக்குப் பிறகு அவையில் சிறிது நேரம் இலகுவான, கலகலப்பான சூழல் உருவானது. இந்த நிகழ்வுகள், சட்டப்பேரவையின் நேரலை ஒளிபரப்பு மற்றும் அரசியல் விவாதங்களின் தன்மை குறித்து மீண்டும் விவாதங்களை எழுப்பியுள்ளன.
இதையும் படிங்க: “விரல் நுனியில் தகவல் இருக்காம்"... சாலைப்பணிகளின் நிதி விவரம் எங்கே? எ.வ.வேலு கேள்வி..!