×
 

மக்களின் வாழ்வாதாரத்தை பறிப்பதா? மேகமலை ஆக்கிரமிப்பு விவகாரத்தில் பி.சண்முகம் ஆவேசம்!

மேகமலையில் 118 அரசு ஊழியர்களை நிலத்திலிருந்து வெளியேற்றக் கோரும் உத்தரவு அநீதியானது என சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டம் மேகமலை வனப்பகுதியில் பல தலைமுறைகளாக விவசாயம் செய்து வாழ்ந்து வரும் 118 அரசு ஊழியர்களை அவர்களின் பூர்வீக நிலங்களில் இருந்து உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவு அநீதியானது என்றும், மக்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் இந்த நடவடிக்கைக்கு எதிராக மக்கள் ஒன்றுதிரண்டு போராட வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐ-எம்) மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் மிகக் காட்டமாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவைத் தொடர்ந்து தேனி மாவட்ட நிர்வாகம் நாளை (ஆகஸ்ட் 24) சம்பந்தப்பட்ட நிலங்களில் இருந்து அரசு ஊழியர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தற்போது அரசு ஊழியர்களாகப் பணியாற்றி வருபவர்களின் முப்பாட்டன், தாத்தா மற்றும் தந்தை உள்ளிட்டோர் பல தலைமுறைகளாக உழுது பயிர் செய்து வந்த நிலங்களை ஆக்கிரமிப்பு என்று வகைப்படுத்தி, அவர்களின் வாரிசுகளை ஆக்கிரமிப்பாளர்களாகச் சித்தரித்து வெளியேற்ற உத்தரவிட்டிருப்பது எந்த வகையில் நியாயமாகும்? எனக் கொந்தளித்துள்ளார். வெளியேறாவிட்டால் பணிநீக்கம் உள்ளிட்ட துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கையும் அப்பட்டமான அநீதி என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதையும் படிங்க: வெடிக்கும் மேகமலை விவகாரம்... சலுகை காட்ட கூடாது..! சுப்ரீம் கோர்ட் திட்டவட்டம்..!!

இதே அணுகுமுறையை நாடு முழுவதும் கடைப்பிடித்தால், பல்லாயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் தங்கள் அரசுப் பணியையோ அல்லது பாரம்பரிய வாழ்வாதார நிலத்தையோ இழக்க நேரிடும் என எச்சரித்த பெ. சண்முகம், பட்டா இல்லாதவர்கள் எல்லாம் ஆக்கிரமிப்பாளர்கள் என்றால், நூறாண்டுகளாகக் குடியிருந்து விவசாயம் செய்யும் எளிய மக்களுக்கு இதுவரை பட்டா வழங்காத ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? வன உரிமைச் சட்டம் 2006 நடைமுறைக்கு வந்து 20 ஆண்டுகள் கடந்தும் அதனை முறையாக அமல்படுத்தாத அதிகாரிகள் மீது அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? என கேள்வி எழுப்பினார்.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் இந்த விவகாரத்தை வெறும் ஆக்கிரமிப்பு கண்ணாடியை அணிந்து கொண்டு பார்க்காமல், மக்களின் வாழ்வுரிமை சார்ந்த மனிதாபிமான கண்ணாடியை அணிந்து பார்த்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை நசுக்கும் இந்த எதேச்சதிகார அநீதிக்கு எதிராக ஜனநாயக சக்திகள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என்றும் பெ. சண்முகம் அறைகூவல் விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: இடதுசாரிகளை ஒடுக்க நினைக்கிறதா தமிழக அரசு? சிபிஐ(எம்) மூத்த தலைவர் பி.சண்முகம் கண்டனம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share