ஊதியத்தை உடனே விடுவியுங்கள்! நதிகள் இணைப்பு திட்ட ஊழியர்களின் வாழ்வாதாரத்திற்காக அண்ணாமலை குரல்!
காவிரி–வைகை–குண்டாறு இணைப்புத் திட்ட நில எடுப்பு ஊழியர்களின் பணிக்காலத்தை 31.12.2027 வரை நீட்டித்து அரசாணை வெளியிடுவதுடன், நிலுவையில் உள்ள 3 மாத ஊதிய நிதியை விடுவிக்க வேண்டும் என வீ தி லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
காவிரி–வைகை–குண்டாறு இணைப்புத் திட்டத்தின் நில எடுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் பணிக்காலத்தை உடனடியாக நீட்டித்து அரசாணை வெளியிட வேண்டும் என்றும், அவர்களின் நிலுவையில் உள்ள 3 மாத ஊதியத்தை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் 'வீ தி லீடர்ஸ்' அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் காவிரி–வைகை–குண்டாறு இணைப்புத் திட்ட நில எடுப்புப் பணிகளுக்காகச் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலகம் மற்றும் 4 தனி வட்டாட்சியர் அலகுகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பணியாற்றும் ஊழியர்களின் பணிக்காலம் கடந்த 31.12.2025 உடன் முடிவடைந்த நிலையில், 01.01.2026 முதல் 31.12.2027 வரை மேலும் இரண்டு ஆண்டுகளுக்குப் பணிக்காலத்தை நீட்டிக்கக் கோரி, தமிழக அரசுக்குக் கடந்த மார்ச் 20, 2026 அன்றே முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளது.
பணிக்கால நீட்டிப்புக்கான அரசாணை இதுவரை வெளியிடப்படாததால், அங்கு பணியாற்றி வரும் ஊழியர்களின் வாழ்வாதாரமும் ஊதியமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நடப்பு 2026 ஆம் ஆண்டின் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாதங்களுக்கான ஊதியம் மற்றும் இதர நிர்வாகச் செலவுகளுக்குத் தேவையான ₹66.52 லட்சம் நிதியை விடுவிக்கக் கடந்த மே 12, 2026 அன்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், இன்று வரையிலும் அதற்கான நிதி ஒதுக்கீடோ அல்லது அரசாணையோ வழங்கப்படவில்லை.
இதையும் படிங்க: வீ த லீடர்ஸ் அமைப்பின் இரண்டாவது மாநாடு..! அதிரும் சென்னை... அதிரடி காட்டும் அண்ணாமலை..!!
கடந்த மூன்று மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததால், காவிரி–வைகை–குண்டாறு இணைப்புத் திட்ட ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு நடுத்தெருவில் நிற்கும் நிலை உருவாகியுள்ளது. எனவே, அரசு ஊழியர்களின் குடும்பச் சூழலையும் வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொண்டு, தமிழக அரசு இனிமேலும் காலதாமதம் செய்யாமல், அவர்களின் பணிக்காலத்தை 31.12.2027 வரை நீட்டித்து உடனடி அரசாணை வெளியிட வேண்டும். மேலும், நிலுவையில் உள்ள ஏப்ரல், மே, ஜூன் மாத ஊதியத்திற்கான நிதியையும் உடனடியாக விடுவிக்க வேண்டும்.
நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள இந்த நிர்வாகச் சிக்கலுக்குத் தமிழக அரசு உடனடியாகத் தீர்வு காண வேண்டும் எனக் களப்பணியாளர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இதையும் படிங்க: திருச்செந்தூரில் நடக்கல..!! "வீ த லீடர்ஸ்"-ன் 2வது மாநாடு தற்காலிகமாக ரத்து..!!