சென்னை அண்ணா சாலை நில மோசடி..!! திமுக எம்.பி கலாநிதி வீராசாமி மகன் மீது பாய்ந்த வழக்கு..!!
சாதியை கூறி தாக்கியதாகவும் கடந்த 2024ம் ஆண்டு அண்ணாநகர் போலீசில் புகார் அளித்தார்.
சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள மதிப்புமிக்க 14 கிரவுண்ட் நிலத்தின் பத்திரத்தை வங்கியில் அடமானம் வைத்து பல லட்சம் ரூபாய் கடன் பெற்று மோசடி செய்த வழக்கில், வடசென்னை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமியின் மகன் சித்தார்த், திமுக கவுன்சிலர் ராணி உள்ளிட்ட நான்கு பேர் மீது அண்ணாநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அன்பரசு என்பவர் அண்ணாநகர் போலீசில் அளித்த புகாரின்படி, அவருக்கு சொந்தமான அண்ணா சாலை நிலத்தின் பவர் ஆஃப் அட்டர்னி (Power of Attorney) பத்திரத்தை சித்தார்த் மிரட்டல் மூலம் பெற்றுக்கொண்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் அந்த பத்திரத்தைப் பயன்படுத்தி வங்கியில் கணிசமான தொகை கடனாகப் பெற்று, அந்தப் பணத்தை அன்பரசுவுக்கு திருப்பித் தராமல் மோசடி செய்துவிட்டதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பணத்தைத் திருப்பிக் கேட்டுச் சென்றபோது, அண்ணா நகர் ரவுண்டானா பகுதியில் சித்தார்த் மற்றும் அவரது துணையினர் அன்பரசுவை சாதியைக் குறிப்பிட்டு தாக்கியதாகவும், அச்சுறுத்தியதாகவும் அன்பரசு குற்றஞ்சாட்டியுள்ளார். இந்தச் சம்பவம் 2024-ம் ஆண்டு நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. அப்போது அண்ணாநகர் போலீசில் புகார் அளிக்கப்பட்டபோதிலும், திமுக ஆட்சியின் கீழ் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று புகார்தாரர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு!
இந்நிலையில், தமிழகத்தில் புதிய தவெக ஆட்சி அமைந்த பிறகு, மீண்டும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு, சித்தார்த், 102வது வார்டு திமுக கவுன்சிலர் ராணி, திமுக எம்.பி.யின் உதவியாளர் ஆசைத்தம்பி, நாராயணன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பண மோசடி, நம்பிக்கை மோசடி, அச்சுறுத்தல், தீண்டாமை வன்கொடுமை (SC/ST தடுப்புச் சட்டம்) உள்ளிட்ட பல்வேறு ஐபிசி மற்றும் சிறப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
போலீசார் தற்போது இந்த வழக்கில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நிலத்தின் உண்மையான உரிமையாளரான அன்பரசு தனது சொத்தை மீட்டுத் தர வேண்டும் என்றும், மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள், வங்கி பரிவர்த்தனை விவரங்கள் உள்ளிட்டவை சேகரிக்கப்பட்டு வருகின்றன.
இந்தச் சம்பவம் அரசியல் பின்னணியில் நடைபெற்ற மோசடி என்ற குற்றச்சாட்டை வலுப்படுத்தியுள்ளது. திமுக தரப்பில் இதுவரை எந்தப் பதிலும் அளிக்கப்படவில்லை. போலீசார் விரைவில் அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: தேர்தல் நாள் மோதல் எதிரொலி..! சேகர்பாபு மீது கொலை முயற்சி வழக்கு..! போலீஸ் ஆக்ஷன்..!