விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான மாதாந்திர ஓய்வூதியம் உயர்வு.. முதல்வரின் அறிவிப்புக்கு அரசாணை வெளியீடு..!
விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான மாதாந்திர ஓய்வூதியம் 21 ஆயிரத்தில் இருந்து 22 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு, இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற விடுதலை வீரர்களின் சேவைக்கு கௌரவம் செலுத்தும் வகையில், அவர்களுக்கான மாதாந்திர ஓய்வூதியத்தை ரூ.22,000-ஆக உயர்த்தியுள்ளது. அதேபோல், அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கான குடும்ப ஓய்வூதியம் ரூ.12,000-ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியின் சமூகநீதி கொள்கையின் ஒரு பகுதியாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் 1966-ஆம் ஆண்டு அக்டோபர் 1 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம், போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் மனைவி மற்றும் சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் மாதமொன்றிற்கு ரூ.50 வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: ரூ.3,000 கோடி மதிப்பு.. ஏலத்திற்கு வரும் பிணையப் பத்திரங்கள்.. தமிழக அரசு அறிவிப்பு..!!
இதனையடுத்து படிப்படியாக உயர்த்தப்பட்டு, கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி முதல் விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.21,000 ஆகவும், விடுதலைப் போராட்ட வீரர்களின் வாரிசுதாரர்களான மனைவி, கணவர், முதிர்வயதடையாத குழந்தைகள் ஆகியோருக்கு வழங்கப்படும் மாதாந்திர குடும்ப ஓய்வூதியம் ரூ.11,500 ஆகவும் உயர்த்தி வழங்கப்பட்டது.
தொடர்ந்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி அன்று நடைபெற்ற 79-வது சுதந்திர தின விழாவின்போது, சென்னை, தலைமைச் செயலகத்தின் கோட்டைக் கொத்தளத்தில் கொடியேற்றி வைத்த பின் ஆற்றிய உரையில், இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக அரும்பாடுபட்ட தியாகச் செம்மல்களைச் சிறப்பிக்கும் வகையில், அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் ரூ.21,000லிருந்து ரூ.22,000-ஆக உயர்த்தப்படும் எனவும், சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் குடும்ப ஓய்வூதியம் ரூ.11,500லிருந்து ரூ.12,000-ஆக உயர்த்தி வழங்கப்படும் எனவும் அறிவித்திருந்தார்.
அதன்படி தற்போதைய ஓய்வூதிய அதிகரிப்புக்கான அரசாணை, வேளாண்மைத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள ஓய்வூதியத் துறையால் இன்று வெளியிடப்பட்டுள்ளது. மேற்கண்டவாறு உயர்த்தி வழங்கப்படுவதால் ஏற்படும் கூடுதல் செலவினமான ரூ.27,63,750/- (ரூபாய் இருபத்தி ஏழு இலட்சத்து அறுபத்தி மூவாயிரத்து எழுநூற்று ஐம்பது மட்டும்) நிதி ஒப்பளிப்பு செய்தும் அரசு ஆணையிடுகிறது. இந்த ஓய்வூதிய உயர்வானது 15.08.2025 முதல் நடைமுறைக்கு வந்தது. இதேபோல் வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள், மன்னர் முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி, வ.உ.சிதம்பரனார் ஆகியோரின் வழித்தோன்றல்களுக்கு வழங்கப்படும் சிறப்பு ஓய்வூதியமும் உயர்கிறது.
தற்போது தமிழ்நாட்டில் சுமார் 500-க்கும் மேற்பட்ட விடுதலை வீரர்கள் மற்றும் அவர்களின் தொடர்புடையவர்கள் இந்த ஓய்வூதியத்தைப் பெறுகின்றனர். இந்த உயர்வு, அவர்களின் தியாகங்களுக்கு ஏற்ப பொருத்தமான நிதி உதவியை உறுதி செய்யும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த ஓய்வூதியத் திட்டத்துடன் இணைந்து, இலவச மருத்துவ உதவி, போக்குவரத்து சலுகைகள் மற்றும் வீட்டு ஒதுக்கீட்டில் முன்னுரிமை போன்ற பல்வேறு நலன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
முதலமைச்சர் ஸ்டாலின், இந்த அரசாணையை வெளியிட்ட பிறகு, "நம் சுதந்திரப் போராட்ட வீரர்கள் தமிழ்நாட்டின் பெருமை. அவர்களின் தியாகத்தை நாம் என்றும் மறக்க மாட்டோம். இந்த உயர்வு, அவர்களின் குடும்பங்களுக்கு நிதி ரீதியான பாதுகாப்பை வழங்கும்" என்று கூறினார். திராவிட முன்னேற்றக் கழக அரசியல், சமூகநீதி அடிப்படையில் இத்தகைய முடிவுகளை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதையும் படிங்க: திருவான்மியூர் டூ உத்தண்டி.. 4 வழித்தட உயர்மட்டச் சாலை அமைக்க டெண்டர் கோரிய தமிழக அரசு..!!