குரூப் 2 தேர்வு ரத்து: இது ஒரு கையாலாகாத அரசு! எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்!
இன்று (பிப்ரவரி 8, 2026) நடைபெறவிருந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2A முதன்மைத் தேர்வுகள் குளறுபடிகளால் ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) இன்று நடத்தவிருந்த குரூப் 2 மற்றும் 2A முதன்மைத் தேர்வுகள், தொழில்நுட்பக் குளறுபடிகள் மற்றும் நிர்வாகத் தோல்விகளால் ரத்து செய்யப்பட்டுள்ளதற்கு அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, திமுக அரசின் நிர்வாகத் தோல்வி: "திமுக ஆட்சியில் நிர்வாகம் எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதற்கு இந்தத் தேர்வு ரத்து ஒரு சான்றாகும். ஒரு தேர்வைக் கூட உருப்படியாக நடத்த வக்கில்லாத கையாலாகாத அரசாக திமுக அரசு உள்ளது" என அவர் சாடியுள்ளார்.
டிஎன்பிஎஸ்சி வரலாற்றிலேயே தேர்வு நடைபெறும் நாளன்று தேர்வு ஒத்திவைக்கப்படுவது இதுவே முதல் முறை என்றும், இது அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஒரு தேர்வில் நடந்திருப்பது தமிழகத்திற்குப் பெரும் அவமானம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: #BREAKING: குரூப் 2, 2A முதன்மை தேர்வுகள் ரத்து: தேர்வாணைய தலைவர் எஸ்.கே. பிரபாகர் அறிவிப்பு!
டெக்னிக்கல் ஃபால்ட்" (Technical Fault) என்று கூறி அரசுத் தப்பிக்க முயல்வதாகவும், இதற்குப் பின்னால் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் பல ஆண்டுகால உழைப்பும், நம்பிக்கையும் சிதைந்துள்ளதை அரசு மறந்துவிடக் கூடாது எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
2021-ல் 5.5 லட்சம் வேலைவாய்ப்புகளை வழங்குவோம் என்றத் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசு, தற்போது இருப்பிலுள்ளத் தேர்வுகளையும் சரியாக நடத்தத் தவறியுள்ளது என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
குறுப் 2 மற்றும் 2A தேர்வு குளறுபடிகளுக்குக் கீழ்நிலை அதிகாரிகள் மீது மட்டும் கண்துடைப்பு நடவடிக்கை எடுக்காமல், இத்தகையத் தவறுகள் எதிர்காலத்தில் வராமல் இருக்க ஸ்டாலின் மாடல் அரசு முறையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், "2026-ல் அமையவுள்ள அதிமுக அரசானது, இளைஞர்களின் கனவுகளை ஈடேற்றும் அரசாக இருக்கும்" என்று தேர்வர்களுக்கு அவர் நம்பிக்கை அளித்துள்ளார்.
இதையும் படிங்க: மருத்துவமனையில் எச்.ராஜா..!! நேரில் சென்று நலம் விசாரித்தார் எடப்பாடி பழனிசாமி..!!