×
 

குரங்கருவியில் திடீர் வெள்ளம்..! அவசர அவசரமாக வெளியேற்றப்பட்ட சுற்றுலா பயணிகள்..!!

குரங்குருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆழியார் வனப்பகுதியில் அமைந்துள்ள குரங்கருவி எனப்படும் கவியருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த அருவி பொள்ளாச்சியிலிருந்து வால்பாறை செல்லும் சாலையில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்திருக்கிறது. அழகிய இயற்கை சூழலில் ரம்மியமாகக் கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் வெளி மாநிலங்களிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் தினமும் வந்து செல்வது வழக்கம்.

இன்று காலை முதல் அருவியில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியாக நேரத்தைக் கழித்து வந்தனர். அப்போது வால்பாறை மலைப்பகுதியிலும் அதன் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் பெய்த கனமழையின் காரணமாக அருவிக்கு வரும் நீர் அளவு திடீரென அதிகரித்தது. ஆர்ப்பரித்துக் கொட்டும் வெள்ளம் பாதுகாப்புத் தடுப்புகளைத் தாண்டி வேகமாகப் பாயத் தொடங்கியது.

 கற்கள் மற்றும் மரக்கிளைகளும் வெள்ளத்துடன் அடித்து வரப்பட்டன.இந்த நிலையை உணர்ந்த வனத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்தனர். அருவியில் குளித்துக் கொண்டிருந்த அனைத்து சுற்றுலாப் பயணிகளையும் அவசர அவசரமாக வெளியேற்றினர். யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாதவாறு பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். தொடர்ந்து அருவியில் குளிக்க தற்காலிகத் தடை விதிக்கப்பட்டது.

இதையும் படிங்க: மாமல்லபுரம் கடற்கரையில் டால்பீன்கள்..! துள்ளி குதிக்கும் சுற்றுலா பயணிகள்..!!

 நீர்வரத்து சீரான பிறகே மீண்டும் அனுமதி வழங்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் இதுபோன்ற திடீர் வெள்ளப்பெருக்கின் வாய்ப்பு உள்ளது. எனவே சுற்றுலாப் பயணிகள் அதிகாரிகளின் அறிவுரைகளைப் பின்பற்றி பாதுகாப்பாகச் செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: இன்று முதல் உதகைக்கு செல்ல தடை.. சுற்றுலா பயணிகளுக்கு செம்ம ஷாக்.. வனத்துறை அதிரடி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share