×
 

நீலகிரி, கோவை, தேனியில் இன்று கனமழை! சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!

நீலகிரி, தேனி, கோவை மலைப்பகுதிகளில் இன்று கனமழையும், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தமிழகக் கடலோரப் பகுதிகளில் நிலவும் கீழ்மட்ட வளிமண்டலக் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாக, இன்று நீலகிரி, தேனி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தென்மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக கோயம்புத்தூர் மாவட்டம் சின்னக்கல்லாரில் 101 மி.மீ (10 செ.மீ) மழை கொட்டித் தீர்த்துள்ளது. அதேபோல் கூடலூர், தேவாலா, அவலாஞ்சி, வால்பாறை ஆகிய பகுதிகளில் தலா 7 செ.மீ மழையும், சென்னை வடபழனி, சைதாப்பேட்டை, விமான நிலையம், ஆலந்தூர், மகாபலிபுரம் உள்ளிட்ட வட கடலோரப் பகுதிகளில் 4 முதல் 5 செ.மீ வரையிலும் மழை பதிவாகியுள்ளது. சமவெளிப் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையாகத் திருச்சி விமான நிலையத்தில் 38.3° செல்சியஸும், குறைந்தபட்ச வெப்பநிலையாகக் கோவை விமான நிலையத்தில் 21.1° செல்சியஸும் பதிவாகியுள்ளது.

இன்றைய வானிலை நிலவரப்படி, நீலகிரி, தேனி மற்றும் கோவை மலைப்பகுதிகளில் கனமழையும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸாகவும் பதிவாக வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க: மழை அப்டேட்! கோவை, நீலகிரியில் கனமழை... சென்னை உள்பட பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

மன்னார் வளைகுடா, தமிழகக் கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ வேகத்திலும் பலத்த சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால், ஆகஸ்ட் 28 வரை மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி முனைவர் வி. ஆர். துரை எச்சரித்துள்ளார்.

இதையும் படிங்க: சென்னை உட்பட 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share