×
 

முதல்வர் ஆவதற்கு நான் அரசியலுக்கு வரவில்லை..!! உணர்ச்சிபொங்க பேசிய கமல்ஹாசன்..!!

சுயநலக்காரர்கள் கையில் ஏஐ உள்ளது. ஏஐயை மாணவர்கள் அளவாக பயன்படுத்த வேண்டும் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அரசியல், சமூகப் பொறுப்பு, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து அவர் கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.

அரசியலுக்கு வந்ததன் நோக்கம் முதல்வர் பதவியை அடைவது அல்ல என்றும், சமூகத்தில் மாற்றத்தை உருவாக்கும் எண்ணமே தனது அரசியல் பயணத்தின் அடிப்படை என்றும் கமல்ஹாசன் தெரிவித்தார். சினிமாவில் யாரும் ஒரே நாளில் நட்சத்திரமாக மாற முடியாததைப் போலவே, அரசியலிலும் பொறுப்பும் அனுபவமும் அவசியம் என அவர் சுட்டிக்காட்டினார்.

மாணவர்கள் அரசியலை வெறும் தேர்தல் அல்லது கட்சி சார்ந்த செயல்பாடாக மட்டும் கருதாமல், அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக அணுக வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். தினமும் உணவு உடலுக்கு எவ்வளவு அவசியமோ, அதேபோல் நாட்டின் நிர்வாகம், ஆட்சி மற்றும் பொதுநல விவகாரங்கள் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வுடன் இருப்பதும் அவசியம் என்றார். முழுநேர அரசியல் ஈடுபாடு என்பது பொறுப்புணர்வுடனும் சமூக அக்கறையுடனும் செயல்படுவதை குறிக்கும் என்றும் விளக்கினார்.

இதையும் படிங்க: "இத்தனை நாட்கள் மக்களின் நம்பிக்கையோடு"..! நேருவின் சாதனையை முறியடித்த பிரதமர் மோடிக்கு கமல்ஹாசன் வாழ்த்து..!!

சமூக வலைத்தளங்களில் வெளியாகும் குறும்படங்கள் அல்லது ‘ரீல்ஸ்’ மட்டுமே வாழ்க்கை அல்ல என்றும், அவை தகவல் பெறுவதற்கான ஒரு கருவியாக மட்டுமே பார்க்கப்பட வேண்டும் என்றும் கூறினார். எவரையும் கண்மூடித்தனமாகப் பின்பற்றாமல், சுயமாக சிந்தித்து முடிவெடுக்கும் திறனை இளைஞர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

ஊழல் குறித்து பேசும்போது, லஞ்சம் வாங்குபவர்களை மட்டுமே குறை கூறுவது போதாது; லஞ்சம் கொடுக்கும் மனநிலையும் அதற்கு காரணமாகிறது என்றார். “கொடுக்கிற கை நீண்டால்தான் வாங்குகிற கை நீளும்” என்ற உவமையின் மூலம், ஊழலை ஒழிக்க பொதுமக்களும் தங்களது பொறுப்பை உணர வேண்டும் என்று தெரிவித்தார். சாலை வசதி, அடிப்படை கட்டமைப்பு உள்ளிட்ட பொதுப் பிரச்சினைகளில் அரசை மட்டும் குற்றம் சாட்டாமல், குடிமக்களாக தங்களின் பங்களிப்பையும் சுயபரிசோதனை செய்ய வேண்டும் என்றார்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், அதை பொறுப்புடனும் அளவுடனும் பயன்படுத்த வேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிய கமல்ஹாசன், நல்ல நோக்கத்திற்காக தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் தலைமுறையாக இளைஞர்கள் உருவாக வேண்டும் என்றார். அரசியலை புறக்கணிப்பதால் அதன் விளைவுகளை பின்னர் அனைவரும் சந்திக்க நேரிடும் என்பதால், மக்கள் தொடர்ந்து விழிப்புடன் இருந்து ஆட்சியை கண்காணிப்பதே ஜனநாயகத்தின் வலிமை என அவர் வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: எரிசக்தி நெருக்கடியை திறம்பட சமாளித்தது இந்தியா..!! பிரதமர் மோடி பெருமிதம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share