×
 

இந்தியாவில் முழுவேகத்தில் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கை! பிரதமர் மோடி நம்பிக்கை!

இந்தியாவில் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் முழு வேகத்தில் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ள பிரதமர் மோடி, ஸ்வீடன் நிறுவனங்கள் சுத்தமான எரிசக்தி, பசுமை ஹைட்ரஜன் உள்ளிட்ட துறைகளில் முதலீடு செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டு உள்ளார்.

ஸ்டாக்ஹோம்: ஐந்து நாடுகள் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் நெதர்லாந்துக்குப் பிறகு ஸ்வீடன் சென்றடைந்தார். ஸ்வீடன் பிரதமர் உல்ஃப் கிறிஸ்டர்சன் அழைப்பின் பேரில் இரு நாள் அரசு முறைப் பயணமாக மோடி வருகை தந்தார். 

அவரது விமானம் ஸ்வீடன் வான்பரப்பில் நுழைந்ததும் அந்நாட்டு போர் விமானங்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டன. விமான நிலையத்தில் ஸ்வீடன் பிரதமர் நேரில் வரவேற்றார். ஸ்வீடனில் வாழும் இந்தியர்கள் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொழில்துறை மற்றும் வியாபாரிகள் கலந்துகொண்ட கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றியபோது, “இந்தியாவில் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன. சுத்தமான எரிசக்தி, பசுமை ஹைட்ரஜன், மின்னணுவியல், செயற்கை நுண்ணறிவு, உள்கட்டமைப்பு, போக்குவரத்து, சுகாதாரம் மற்றும் உயிர் அறிவியல் உள்ளிட்ட துறைகளில் ஸ்வீடன் நிறுவனங்கள் முதலீடு செய்ய வேண்டும்” என அழைப்பு விடுத்தார்.

இதையும் படிங்க: இந்தியாவில் முதலீடு செய்யுங்க..!! சுவீடன் தொழிலதிபர்களை அழைத்தார் பிரதமர் மோடி..!!

கடந்த 12 ஆண்டுகளாக சீர்திருத்தங்கள், செயல்திறன் மற்றும் மாற்றம் ஆகிய கொள்கைகளுடன் இந்தியா வேகமாக முன்னேறி வருவதாகவும், அரசின் உறுதியான அரசியல் விருப்பத்தால் சீர்திருத்தங்கள் விரைவு ரயில்போல் முன்னோக்கி செல்வதாகவும் பிரதமர் தெரிவித்தார். 

ஜனநாயகம், வெளிப்படைத்தன்மை, புதுமை மற்றும் ஸ்திரத்தன்மை ஆகியவற்றில் இந்தியாவும் ஸ்வீடனும் பொதுவான அடிப்படையில் இணைந்துள்ளன என்பதை சுட்டிக்காட்டிய அவர், ஸ்வீடனின் புதுமை மற்றும் தொழில்நுட்ப பலத்தை இந்தியாவின் வளர்ச்சி வேகத்துடன் இணைக்க வேண்டும் என்றார்.

இந்தியா - ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளதையும் பிரதமர் மோடி நினைவூட்டினார். இது வர்த்தகம், தொழில்நுட்பம், உற்பத்தி மற்றும் விநியோகச் சங்கிலிகளில் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

“உலகில் முதலீடு, புதுமை மற்றும் உற்பத்திக்கு உகந்த சிறந்த இடம் இந்தியா” என்று வலியுறுத்திய பிரதமர், “இந்தியாவில் வடிவமைத்து, இந்தியாவில் தயாரித்து, இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யுங்கள்” என்ற கொள்கையை ஸ்வீடன் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

இந்தக் கூட்டத்தில் ஸ்வீடன் இளவரசி விக்டோரியா, பிரதமர் உல்ஃப் கிறிஸ்டர்சன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வான் டெர்லையன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பிரதமர் மோடியின் இந்த ஐரோப்பிய சுற்றுப்பயணம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு புதிய உத்வேகம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:  300 ஆண்டுகளுக்குப் பின் நெதர்லாந்திலிருந்து மீட்கப்பட்ட வரலாற்றுச் செப்பேடுகள் - பிரதமர் மோடியிடம் ஒப்படைப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share