×
 

ஊழல் இல்லா தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வாரீர்! CII மாநாட்டில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அழைப்பு!

ஊழல் இல்லா தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அனைத்து முதலீட்டாளர்களும் வரவேண்டும் என சென்னை கிண்டியில் நடைபெற்ற உள்கட்டமைப்பு உச்சி மாநாட்டில் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலேயே ஊழல் இல்லாத முதல் மாநிலமாகத் தமிழ்நாட்டை உருமாற்றி வருகிறோம்; எந்தவிதத் தடங்கலும் இன்றி தொழில் தொடங்குவதற்கும் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் அனைத்து முதலீட்டாளர்களும் தமிழ்நாட்டை நோக்கி தைரியமாக வர வேண்டும் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆவேசமாக அழைப்பு விடுத்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இந்திய தொழில் கூட்டமைப்பின் (CII) சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு உள்கட்டமைப்பு உச்சி மாநாடு 2026 நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இக்கருத்துக்களைப் பதிவு செய்தார்.

மாநாட்டில் மேடையேறி சிறப்புரையாற்றிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, அறிஞர் அண்ணாவின் சமத்துவ நோக்கம், சமூக நீதி மற்றும் பொருளாதார விடுதலையை மையமாகக் கொண்டே நமது ஆட்சி செயல்படுகிறது. சாதி, மத வேறுபாடின்றி எம்.ஜி.ஆர் மற்றும் அண்ணாவின் கொள்கை வழியில் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் அரசாக இது அமைந்துள்ளது. கலைஞர் மற்றும் ஜெயலலிதா ஆகியோருக்குப் பிறகு தமிழக மக்கள் ஒரு புதிய தலைவரைத் தேர்ந்தெடுத்து வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தைத் தந்துள்ளனர் என்று சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து ஆட்சியின் சாதனைகளைப் பட்டியலிட்ட அவர், வளர்ச்சியை நோக்கிச் செல்ல வெளிப்படைத்தன்மை மிகவும் அவசியம். ஒரு அரசுக்குக் கட்டுமானம், போக்குவரத்து மற்றும் தொழில்நுட்பம் ஆகிய மூன்றும் முக்கியத் தூண்கள் ஆகும். கடந்த 80 நாட்களில் அரசு அலுவலகங்களுக்கும் அமைச்சர்களின் அறைகளுக்கும் மக்கள் காத்துக் கிடக்கும் நிலையைக் மாற்றி, அனைத்துச் சேவைகளையும் இணையவழியிலேயே (Online) பெறும் வகையில் முதலமைச்சர் வழிவகை செய்துள்ளார். இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கிய நமது முதலமைச்சர் அதைத் தூக்கிப் போட்டுவிட்டு மக்கள் சேவைக்கு வந்துள்ளார். பணமோ சாதியோ இன்றித் தூய்மையான முறையில் வாக்களித்த மக்களுக்கு நாங்கள் அளித்த வாக்குறுதிகளைக் நிச்சயமாக நிறைவேற்றுவோம் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: மத்திய அரசுக்குச் சவால் விட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா! நீட் தேர்வு நிச்சயம் திரும்ப பெறப்படும்!

முந்தைய ஆட்சிகளின் உள்கட்டமைப்புச் சீர்கேடுகளைச் சாடிய அமைச்சர், கடந்த 10 முதல் 15 ஆண்டுகளில் கட்டப்பட்டப் பல கட்டிடங்கள் அடுத்த 10 ஆண்டுகளில் இடிந்து விழும் நிலையில் உள்ளதாக ஐஐடி ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சிங்கப்பூரில் ஒரு சாலை அமைத்தால் 6 ஆண்டுகள் அதற்கு ஒப்பந்ததாரரே பொறுப்பு என்ற விதி உள்ளது. ஆனால் இங்குச் சாலை போடாமலேயே கணக்கு காட்டிய அவலம் நடந்துள்ளது. வரும் காலங்களில் ஒரு திட்டம் கொண்டு வரப்பட்டால் அது அடுத்த 50 ஆண்டுகளுக்கான எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டே செயல்படுத்தப்படும். சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு 3 மணி நேரத்தில் செல்லும் வகையில் அதிவேகச் சாலைத் திட்டங்கள் திட்டமிடப்பட்டு வருகின்றன என்று குறிப்பிட்டார்.

ஆகஸ்ட் 5-ல் தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட் குறித்துப் பேசிய அவர், தமிழ்நாட்டின் எதிர்காலமே இளைஞர்கள் தான் என முதலமைச்சர் ஆழமாக நம்புகிறார். அதன் அடிப்படையில் வரும் பட்ஜெட்டில் இளைஞர்களுக்கான பிரம்மாண்ட அறிவிப்புகளும் புதிய தொலைநோக்கு இலக்குகளும் இடம்பெறும். வட மற்றும் தென் மாவட்டங்களில் உயர்கல்வி கற்க முடியாமல் இருக்கும் பெண்களுக்குச் சிறப்பு முன்னுரிமை அளிக்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் விளையாட்டுத் தலைநகரமாகத் தமிழ்நாடு உருவெடுப்பது உறுதி எனத் தன் உரையை நிறைவு செய்தார்.

இதையும் படிங்க: கரூரில் காயமடைந்தவர்களுக்கு தவெக சார்பில் நிவாரணம்! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அறிவிப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share