தாக்குதலை தீவிரப்படுத்தும் ஈரான்! நிலைகுலைந்தது துபாய் ஏர்போர்ட்! நாளொன்றுக்கு ரூ.2,000 கோடி இழப்பு!!
ஈரானின் ஏவுகணை தாக்குதலால் துபாயின் விமான போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. இதனால், நாளொன்றுக்கு, 2,000 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
மேற்காசியாவில் (மத்திய கிழக்கில்) அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் இடையேயான போர் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் பதிலடியாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ) மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது. குறிப்பாக துபாய் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
உலகின் மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலிபா அருகே ஏவுகணை வீசப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக துபாய் சர்வதேச விமான நிலையம் (DXB) முழுமையாக மூடப்பட்டுள்ளது. விமான போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. இதேபோல் அபுதாபி, தோஹா போன்ற பிற விமான நிலையங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
துபாய் விமான நிலையம் உலகின் மிக பிஸியான சர்வதேச விமான நிலையமாகும். நாளொன்றுக்கு சுமார் 2.6 லட்சம் பயணிகளை கையாள்கிறது. ஆண்டுக்கு 9 கோடிக்கும் மேற்பட்ட பயணிகள் (2025-ல் 9.52 கோடி) வருகின்றனர்.
இதையும் படிங்க: யுஏஇ, சவுதி, இஸ்ரேல், கத்தார் நாடுகளுக்கான விமான சேவை ரத்து! கைவிரித்தது ஏர் இந்தியா!! மக்கள் தப்பிக்க வழி இருக்கா?
260-க்கும் மேற்பட்ட நகரங்கள், 100 நாடுகளுக்கு விமானங்கள் இயங்குகின்றன. ஐரோப்பா, ஆசியா, ஆப்ரிக்கா, அமெரிக்கா இடையேயான பயணங்களுக்கு துபாய் மையமாக உள்ளது. நெடுந்தூர விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் இடமாகவும், சரக்கு போக்குவரத்துக்கும் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த விமான நிலையம் துபாய் பொருளாதாரத்தின் முதுகெலும்பு. 2023-ல் விமான போக்குவரத்து துறை துபாய் ஜிடிபியில் 27% பங்களிப்பு செய்தது – சுமார் 3.37 லட்சம் கோடி ரூபாய். 6.3 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளித்தது.
விமான நிலையம் மூடப்பட்டதால், விமான கட்டணங்கள், டியூட்டி ஃப்ரீ ஷாப்பிங், ஹோட்டல், சுற்றுலா, சரக்கு போக்குவரத்து ஆகியவற்றில் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. நாளொன்றுக்கு சுமார் 2,000 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது என்று மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. இது விரைவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வாகவும், உலக வர்த்தகத்தில் தாக்கமாகவும் மாறலாம்.
துபாய் தன்னை பாதுகாப்பான, ஆடம்பரமான சுற்றுலா தலமாக காட்டி வந்தது. ஆனால் இந்த தாக்குதல் அதன் பிம்பத்தை சீர்குலைத்துள்ளது. பயணிகள் விமான நிலையங்களில் தவித்து வருகின்றனர். எமிரேட்ஸ், எத்திஹாட் போன்ற விமான நிறுவனங்கள் சேவைகளை ரத்து செய்துள்ளன. இந்தியாவிலிருந்து யுஏஇ செல்லும் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் – யுஏஇயில் 35.5 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர். வெளியுறவு அமைச்சகம் அவசர உதவி எண்களை வெளியிட்டுள்ளது.
போர் தொடர்ந்தால் துபாய் பொருளாதாரம் பெரும் சரிவை சந்திக்கும் அபாயம் உள்ளது. உலக நாடுகள் அமைதி வலியுறுத்தி வருகின்றன. விரைவில் போர் நிறுத்தம் ஏற்பட்டு, விமான சேவை சீராக வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதையும் படிங்க: ஈரானை நொறுக்கும் அமெரிக்கா! உள்ளே வரும் ரஷ்யா! போரை நிறுத்துங்க!! புடின் மாஸ் எண்ட்ரி!!