×
 

நெல் கொள்முதல் நிலையங்களில் தொடரும் லஞ்ச வசூல்! மழையில் நனையும் நெல்லை காக்க டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

பண்ருட்டி நெல் கொள்முதல் நிலையத்தில் மூட்டைக்கு ரூ.50 லஞ்சம் கேட்கப்படுவதாகக் குற்றம்சாட்டியுள்ள டிடிவி தினகரன், முதலமைச்சரின் ஊழல் எதிர்ப்பு முழக்கத்தை விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டை ஒன்றுக்கு ரூ.50 வரை பகிரங்கமாக லஞ்சம் வசூலிக்கப்படுவதாக விவசாயிகள் குமுறி வருவதாகவும், லஞ்சத்திற்கு எதிராக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பேசி வரும் முழக்கங்கள் அனைத்தும் நடைமுறைக்கு உதவாத வெறும் சினிமா வசனம்தானா என்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மிகக் காட்டமாகச் சாடியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைதளப் பதிவில், கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் நிலவும் அவலநிலையைச் சுட்டிக்காட்டியுள்ளார். பண்ருட்டி சுற்றுவட்டாரக் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ரூ.50 வரை லஞ்சம் கொடுத்தால் மட்டுமே நெல்லைக் கொள்முதல் செய்ய முடியும் என்று அதிகாரிகள் கறாராகக் கூறுவதாக விவசாயிகள் கண்ணீருடன் வேதனை தெரிவிக்கின்றனர்.

தவெக அரசின் முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி வாக்குறுதியை நம்பி ஏமாந்த விவசாயிகள், வாங்கிய கடனை அடைக்கக் கஷ்டப்பட்டு விளைவித்த நெல்லைக் கொண்டுவந்து 15 நாட்களாகக் காத்துக்கிடக்கும் அவலம் நீடிக்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: தவெக-வின் முகமூடியை கிழிப்போம்! ஆளுநரை சந்தித்த பின் டிடிவி தினகரன் ஆவேசம்!

அதிகாரிகளின் இந்த லஞ்ச பேரம் மற்றும் மெத்தனப் போக்கினால் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் திறந்தவெளியில் மழையில் நனைந்து முளைத்து வீணாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், விவசாயிகள் விளைவித்த நெல்லுக்கு அரசு விலை நிர்ணயிக்கும் முன்பே, அதற்கான லஞ்சத் தொகையை அதிகாரிகள் நிர்ணயிக்கும் நிலையை உருவாக்கியிருப்பது வெட்கக்கேடானது. கடந்த மாதம் இதே கடலூர் மாவட்டத்தில் உணவுத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு செய்து ஓர் அதிகாரி மீது நடவடிக்கை எடுத்த பிறகும், மீண்டும் அதே பகுதியில் தங்குதடையின்றி லஞ்ச வேட்டை தொடர்வது அரசின் நிர்வாகச் சீர்கேட்டையே காட்டுகிறது எனக் குற்றம்சாட்டினார்.

ஊழலை ஒழிப்பதற்குத் தீவிரக் களக் கண்காணிப்பும், தவறிழைக்கும் அதிகாரிகள் மீது பாரபட்சமற்ற உடனடி நடவடிக்கைகளுமே தீர்வாக அமையுமே தவிர, மேடைகளில் பேசப்படும் வீர வசனங்களால் எதையும் சாதிக்க முடியாது என்பதை அரசு உணர வேண்டும் எனத் தெரிவித்த டிடிவி தினகரன், விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை எவ்வித லஞ்சமுமின்றி உடனடியாகப் போர்க்கால அடிப்படையில் கொள்முதல் செய்யத் தமிழ்நாடு அரசு விரைந்து உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: விலைவாசி உயர்வு அரசின் கையாலாகாத்தனம்! தவெக அரசை சாடிய டிடிவி தினகரன்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share