×
 

விலைவாசி உயர்வு அரசின் கையாலாகாத்தனம்! தவெக அரசை சாடிய டிடிவி தினகரன்!

அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு தவெக அரசின் நிர்வாகத் திறமையின்மையைக் காட்டுகிறது என விமர்சித்துள்ள டிடிவி தினகரன், ரேஷனில் கூடுதல் பொருட்கள் வழங்க வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பண்டங்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து கொண்டே செல்வது ஆளும் தவெக அரசின் நிர்வாகத் திறமையின்மையையும் கையாலாகாத்தனத்தையுமே வெளிப்படுத்துகிறது என்றும், விலைவாசியைக் கட்டுப்படுத்தும் வரை ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களின் அளவை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மிகக் காரசாரமாகச் சாடியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைதளப் பதிவில், தமிழகத்தில் புதிய அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதலே ஏழை, எளிய மற்றும் விளிம்புநிலை மக்களின் அன்றாடத் தேவைகளான உணவுப் பொருட்களின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து வருவதாகக் குற்றம்சாட்டியுள்ளார். 

ஆட்சிக்கு வந்து நூறு நாட்களைக் கடந்த பின்னரும் முழுமையான விவசாயக் கடன் தள்ளுபடி, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500 உரிமைத்தொகை உள்ளிட்ட முக்கியத் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை அரசு வஞ்சித்து வருகிறது; மின்கட்டண உயர்வு, சென்னை மாநகராட்சி சொத்துவரி உயர்வு எனத் தொடர்ச்சியான வரிச்சுமைகளால் நடுத்தர மக்களின் குடும்ப பட்ஜெட் ஏற்கெனவே நிலைகுலைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதையும் படிங்க: அம்மாவின் ஆட்சி மீண்டும் வர அனைவரும் ஒன்றிணைய வேண்டும்! டிடிவி தினகரன் அழைப்பு!

மக்களின் அன்றாட வாழ்க்கையோடு நேரடித் தொடர்புடைய அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக்கூடக் கட்டுப்படுத்த நிர்வாக ரீதியான நடவடிக்கைகளை எடுக்கத் தவறிவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், அடுத்தடுத்து முக்கியப் பண்டிகைகள் நெருங்கி வரும் சூழலில், சர்க்கரை விலை 50 சதவீதம் வரையிலும், அரிசி விலை 40 சதவீதம் வரையிலும், சமையல் எண்ணெய் விலை 60 சதவீதம் வரையிலும் எகிறியுள்ளதாகப் புள்ளிவிவரங்களுடன் தெரிவித்துள்ளார். இந்தத் தாறுமாறான விலையேற்றம் சாமானிய மக்களின் பண்டிகைக் காலக் கொண்டாட்டங்களையே கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

எனவே, சந்தையில் நிலவும் அத்தியாவசியப் பொருட்களின் கட்டுக்கடங்காத விலை உயர்வை உடனடியாகக் கட்டுக்குள் கொண்டுவரத் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் ஆக்கபூர்வ நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள டிடிவி தினகரன், வெளிச்சந்தையில் விலை குறையும் வரை நியாயவிலைக் கடைகள் (ரேஷன் கடைகள்) மூலமாக வழங்கப்படும் அ
ரிசி, பருப்பு, சர்க்கரை, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் மாதாந்திர அளவை மக்களின் தேவைக்கேற்ப கணிசமாக உயர்த்தி வழங்கிட முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் உடனடி உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: தாய்மார்களை கொச்சைப்படுத்துவதா? அமைச்சர் அருண்ராஜ் பேச்சுக்கு டிடிவி தினகரன் கண்டனம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share