செந்தில்நாதனை ஏன் இன்னும் பிடிக்கல? திமுக அரசை நோக்கி ஜோதிமணி எம்.பி. சரமாரி கேள்வி!
கரூர் தொகுதி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, பாஜக கரூர் மாவட்டத் தலைவர் வி.வி. செந்தில்நாதன் மீது முன்வைத்துள்ள விமர்சனங்கள் மற்றும் தமிழகக் காவல்துறையிடம் அவர் எழுப்பியுள்ள கேள்விகள் கூட்டணிக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி அவர்களைப் பற்றிச் சமூக வலைதளங்களிலும், பொதுக்கூட்டங்களிலும் அவதூறான மற்றும் ஆபாசமான கருத்துகளைப் பரப்பியதாகக் கூறப்படும் பாஜக கரூர் மாவட்டத் தலைவர் வி.வி. செந்தில்நாதன் மீது நடவடிக்கை எடுக்காத தமிழகக் காவல்துறையின் போக்கைக் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கடுமையாகச் சாடியுள்ளார். பெண்களைப் பாதுகாப்பதே திராவிட மாடல் அரசின் கொள்கை என்று கூறும் திமுக அரசு, இந்த விவகாரத்தில் மெத்தனமாக இருப்பது ஏன் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி கரூரில் நடைபெற்ற ஒரு போராட்டத்தின் போது, ஜோதிமணி எம்.பி. குறித்து இழிவான கருத்துகளைப் பேசியதாக பாஜக மாவட்டத் தலைவர் செந்தில்நாதன் மீது கரூர் நகரக் காவல்துறையினர் ஏற்கனவே வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர் மீது பெண்களைத் துன்புறுத்துதல் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண்களை இழிவுபடுத்திய நபர் மீது ஆதாரங்களுடன் புகார் அளித்தும், FIR பதிவு செய்யப்பட்டு பல நாட்கள் கடந்தும் அவர் ஏன் இன்னும் கைது செய்யப்படவில்லை? சட்டத்தின் பிடியிலிருந்து அவர் தப்பிப்பது எப்படி? என ஜோதிமணி ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை இந்த விவகாரத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறது? ஒரு பெண் மக்கள் பிரதிநிதிக்கே இந்த நிலை என்றால், சாதாரணப் பெண்களின் பாதுகாப்பு என்னவாகும்?" என அவர் வினவியுள்ளார். திமுக - காங்கிரஸ் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட விவகாரங்களில் ஏற்கனவே இழுபறி நீடித்து வரும் நிலையில், ஜோதிமணி எம்.பி.-யின் இந்த நேரடி விமர்சனம் அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: “பாஜகவின் பிடியில் சபாநாயகர்; நாடாளுமன்றத்தில் ஜனநாயகம் முடக்கம்!” ஜோதிமணி எம்பி கடும் சாடல்!
பெண்களை இழிவுபடுத்தும் எவராக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், செந்தில்நாதனை உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றும் அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: சீன ஊடுருவல்: ராகுலை கண்டு பிரதமர் பயப்படுவது ஏன்? கரூா் எம்.பி. ஜோதிமணி அதிரடி கேள்வி!