பழனி நில மோசடி விவகாரத்தில் திடீர் திருப்பம்... காலையிலேயே களமிறங்கிய சிபிசிஐடி... முக்கிய நபர் வீட்டில் அதிரடி சோதனை...!
கொடைக்கானல் முன்னாள் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் வீட்டில் சிபிசிஐடி சோதனை நடத்தி வருகின்றனர்.
பழனியில் சுமார் ₹100 கோடி மதிப்பிலான கோயில் நிலம் சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் வழக்கு தொடர்பாக, கொடைக்கானல் முன்னாள் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் வீட்டில் சிபிசிஐடி சோதனை நடத்தி வருகின்றனர்.
1888-ஆம் ஆண்டு குப்புசாமி மணியக்காரர் என்பவர் தண்டாயுதபாணி சுவாமி டிரஸ்ட் என்ற அறக்கட்டளையை நிறுவி, சுமார் 1 ஏக்கர் 40 சென்ட் நிலத்தை அதற்காக பதிவு செய்திருந்தார். அந்த நிலம் கோயில் கைங்கரியப் பணிகளுக்கும், பக்தர்களின் பயன்பாட்டிற்கும், மடங்களின் தேவைகளுக்குமே பயன்படுத்தப்பட வேண்டும் என்றும், வணிக ரீதியாக பயன்படுத்தவோ, வாங்கவோ, விற்கவோ கூடாது என்றும் தர்மசாசனம் மூலம் நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, அந்த நிலம் பல ஆண்டுகளாக கோயிலின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. பின்னர், சிலர் அந்த நிலத்தை வணிக ரீதியாக பயன்படுத்தியதாகத் தெரியவந்ததைத் தொடர்ந்து, கோயில் நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இதையும் படிங்க: 6 மாதத்தில் ஆட்சி மாற்றம்... திமுகவுக்கு தாவும் தவெக எம்.எல்.ஏ.க்கள்... பகீர் கிளப்பிய அனிதா ராதாகிருஷ்ணன்...!
அந்த வழக்கில், 2025-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, கோயிலின் இணை ஆணையர் அந்த நிலத்தின் நிர்வாகியாக செயல்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, புதர்மண்டிக் கிடந்த அந்த நிலத்தை சுத்தம் செய்து, பக்தர்களின் பயன்பாட்டிற்காக கட்டணமில்லா வாகன நிறுத்துமிடம் கோயில் நிர்வாகம் அமைத்தது.
இந்த நிலையில், டிரஸ்ட் நிர்வாகி எனக் கூறப்படும் முருகதாஸ் என்பவர், பழனியைச் சேர்ந்த வெள்ளத்துரை மற்றும் சேதுபதி ஆகிய இருவருக்கு சுமார் ₹2 கோடி மதிப்பில் அந்த நிலத்தை பத்திரப்பதிவு செய்ததாக கூறப்படுகிறது.
இந்தப் பத்திரப்பதிவின்போது, போலி ஆவணங்கள் உருவாக்கப்பட்டதுடன், நீதிமன்றத் தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக இருப்பதாகக் கூறி பத்திரப்பதிவு மேற்கொள்ளப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையடுத்து, அப்போதைய பத்திரப்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மற்றும் மாவட்ட பதிவாளர் சசிகலா ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தமிழக அரசு இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றியது.
வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட பின்னர், முதல் கட்டமாக சிபிசிஐடி அதிகாரிகள் பழனியில் உள்ள தேவஸ்தான அலுவலகம், சம்பந்தப்பட்ட நிலம் மற்றும் பத்திரப்பதிவு அலுவலகத்தில் தீவிர விசாரணை நடத்தினர்.
அதன் தொடர்ச்சியாக, நேற்று திண்டுக்கல்லில், சம்பவம் நடைபெற்ற காலகட்டத்தில் பணியாற்றிய தாசில்தார்கள், கோயில் நிலப்பிரிவு அதிகாரிகள் மற்றும் பத்திரப்பதிவுத் துறை அதிகாரிகளிடம் சிபிசிஐடி எஸ்.பி. தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. அதேபோல், சிபிசிஐடி அதிகாரிகள் குழுக்களாகப் பிரிந்து பழனியிலும் பல்வேறு இடங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக கொடைக்கானல் முன்னாள் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் வீட்டில் சிபிசிஐடி சோதனை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல்லில் உள்ள ஜஸ்டின் மணிகண்டன் வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். நில மோசடி விவகாரம் தொடர்பாக முக்கிய ஆவணங்கள் அல்லது பணம் போன்றவை பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என சோதனை நடந்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: தமிழகம் முழுவதும் நடந்த மெகா ரெய்டு... கட்டு கட்டாய் சிக்கிய கரன்சி... எவ்வளவு தெரியுமா?