×
 

#BREAKING: தேர்தலில் மநீம போட்டியில்லை! கமல் அறிவிப்பு!

மதவாத சக்திகளை வீழ்த்தவும், தமிழக நலன் கருதியும் திமுக தலைமையிலான கூட்டணி வேட்பாளர்களை நிபந்தனையின்றி ஆதரிப்பதாக தெரிவித்துள்ளார்.

தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு புதிய அரசியல் நாகரீகத்தை விதைக்கும் வகையில், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் நேரடியாகப் போட்டியிடப் போவதில்லை என்ற அதிரடி முடிவை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று அறிவித்துள்ளார். "நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று" என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலான கூட்டணி வேட்பாளர்களுக்குத் தனது கட்சி நிபந்தனையற்ற ஆதரவை வழங்கும் என்று தெரிவித்துள்ளார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேச நன்மைக்காகத் தொடங்கிய இந்தப் பயணம், தற்போது தமிழகத்தின் உரிமைகளைக் காக்கும் ஒரு பெரும் போராக உருவெடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொகுதிப் பங்கீடு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் சுமூகமாகவும், நட்புணர்வோடும் அமைந்ததாகக் குறிப்பிட்ட கமல்ஹாசன், ஒரு இக்கட்டான சூழலிலேயே இந்த முடிவை எடுத்ததாகக் கூறியுள்ளார். திமுக தரப்பில் ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் 'உதயசூரியன்' சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற பரிந்துரை, மக்கள் நீதி மய்யத்தின் தொண்டர்களுக்கும் தனக்கும் ஏற்புடையதாக இல்லை என்பதை அவர் வெளிப்படையாகப் பதிவு செய்துள்ளார். "பேட்டரி டார்ச் என்பது வெறும் சின்னமல்ல, அது எங்களின் அடையாளம்; ஒன்பது ஆண்டுகளாக என்னோடு பயணிக்கும் தொண்டர்களின் உணர்வுகளை என்னால் புறக்கணிக்க முடியாது" என்று உணர்ச்சிப்பூர்வமாக அவர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மதவாத சக்திகளின் சூழ்ச்சிகளை முறியடிக்க 'திராவிட மாடல் 2.0' அரசு அமைவது காலத்தின் கட்டாயம் என்று வலியுறுத்தியுள்ள கமல்ஹாசன், இது வெறும் ஆட்சி மாற்றம் மட்டுமல்ல, காந்தி, பெரியார், அம்பேத்கர் ஆகியோரின் கொள்கைகளைப் பாதுகாக்கும் அறப்போர் என்று கூறியுள்ளார். தேர்தல் அரசியலில் சீட்டுகளை விட்டுக்கொடுப்பது தியாகமல்ல, அது ஒரு கடமை என்றும், ஒரு நல்ல சகோதரனாகத் தமிழகத்தின் முன்னேற்றத்திற்காகப் பொறுமை காப்பதே முறையானது என்றும் அவர் விளக்கியுள்ளார். தேர்தல் என்பது அரசியலின் ஒரு பகுதி மட்டுமே தவிர, அதுவே இறுதி முடிவல்ல என்று குறிப்பிட்ட அவர், மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் மொழிக்காகவுமான போராட்டம் எப்போதும் போலத் தொடரும் என உறுதி அளித்துள்ளார்.

இதையும் படிங்க: திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு!

நிபந்தனையற்ற ஆதரவை அறிவித்துள்ளதன் மூலம், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கூட்டணிக்கு மிகப்பெரிய பலத்தை கமல்ஹாசன் சேர்த்துள்ளார். தன் சுயநலமற்ற அரசியலுக்கு முன்னுதாரணமாகத் திகழும் தொண்டர்களுக்குத் தலைவணங்குவதாகக் கூறிய அவர், விரைவில் அமையவிருக்கும் புதிய அரசின் பதவியேற்பு விழாவில் முதலமைச்சரைச் சந்தித்து வாழ்த்துவோம் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தியுள்ளார். கமல்ஹாசனின் இந்தத் திடீர் முடிவு தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, மற்ற கட்சிகளுக்கு ஒரு பாடமாகவும் அமைந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

இதையும் படிங்க: ஊண் உறக்கம் இல்லை! திராவிட மாடல் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்ல தொண்டர்களுக்கு முதல்வர் அழைப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share