×
 

கர்நாடக முதலமைச்சருக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்! காவிரியில் பங்கு நீரை பெற தவெக அரசுக்கு வலியுறுத்தல்!

காவிரியில் தமிழ்நாட்டிற்குரிய பங்கு நீரைத் தர மறுக்கும் கர்நாடக முதலமைச்சருக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அரசியல் சாசன சட்டத்தையும், உச்சநீதிமன்றத் தீர்ப்புகளையும் மதிக்காமல் காவிரியில் தமிழகத்திற்குரிய பங்கு நீரைத் தர மறுக்கும் கர்நாடக முதலமைச்சருக்குக் கடும் கண்டனம் தெரிவிப்பதாகவும், வரும் ஜூலை 22-ஆம் தேதி நடைபெற உள்ள காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் உரிய நீரைப் பெற தவெக அரசு உறுதியான அழுத்தம் தர வேண்டும் என்றும் அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

டெல்டா மாவட்ட விவசாயிகள் மற்றும் தமிழகத்தின் சுமார் 20-க்கும் மேற்பட்ட மாவட்ட மக்கள் குடிநீருக்காகக் காவிரியை நம்பியே உள்ளனர். உச்ச நீதிமன்றம் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டித் தீர்ப்பளித்த பின்பும், கர்நாடக ஆட்சியாளர்கள் தமிழகத்தை வெள்ள உபரிநீர் வடிகாலாக மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர்.

கர்நாடக அணைகள் நிரம்பிய பிறகுதான் தமிழகத்திற்குப் பங்கு நீர் வழங்கப்படும் என்று அந்நாட்டு முதலமைச்சர் பேசியிருப்பது மோசடித்தனமான வறட்டுப் பிடிவாதமாகும். 'கடலில் அலை எப்போது ஓய்வது, நாம் எப்போது குளிப்பது?' என்ற பழமொழிதான் இதற்கு ஞாபகம் வருகிறது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல் சர்வாதிகாரி போல் நடக்கும் கர்நாடக முதலமைச்சருக்குத் தமிழக மக்களின் சார்பாக எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதையும் படிங்க: மாநில உரிமைகளை தொட்டால் விடமாட்டோம்! புதிய சட்டங்கள் குறித்து மு.க.ஸ்டாலின் கடும் எச்சரிக்கை!

தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 177.25 TMC காவிரி நீரை கர்நாடகா வழங்க வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டிய எடப்பாடி பழனிசாமி, தற்போதைய நிலவரத்தைப் பட்டியலிட்டுள்ளார். ஜூன் மாதம் தரவேண்டிய 9.19 TMC தண்ணீருக்குப் பதிலாக வெறும் 2.91 TMC மட்டுமே திறக்கப்பட்டுள்ளது (நிலுவை: 6.28 TMC). ஜூலை மாதம் மொத்தம் திறக்கப்பட வேண்டிய 31.24 TMC நீரின்படி, முதல் 20 நாட்களில் 21 TMC திறந்திருக்க வேண்டும். ஆனால், இன்றுவரை அந்தப் பங்கு நீர் முழுமையாகத் திறந்துவிடப்படவில்லை.

காவிரியில் தண்ணீரைத் திறக்க முடியாது என்று கர்நாடக நீர்ப்பாசனத் துறை அமைச்சர் உண்மைக்கு மாறாகக் கூறியபோதும், அதனைக் தட்டிக்கேட்காமல் மௌனம் காத்த தவெக அரசின் செயலற்ற தன்மை டெல்டா விவசாயிகளுக்குச் செய்யும் துரோகம் என்று அவர் சாடியுள்ளார்.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தவெக அரசு விவசாயிகளை ஏமாற்றிவிட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். தேர்தல் பரப்புரையின் போது, சிறு விவசாயிகளின் கூட்டுறவு வங்கிக் கடன் முற்றிலுமாக ரத்து செய்யப்படும் என்றும், பெரு விவசாயிகளுக்கு 50 சதவீதக் கடன் ரத்து செய்யப்படும் என்றும் தவெக தலைவர் அறிவித்தார். ஆனால், ஆட்சிப் பொறுப்பை ஏற்றபின், குறு-சிறு விவசாயிகளுக்கு ரூ.75,000 வரை மட்டுமே பயிர்க்கடன் தள்ளுபடி என்றும், அதற்கு மேல் உள்ளவர்களுக்கு வெறும் ரூ.35,000 மட்டுமே தள்ளுபடி என்றும் அறிவித்து விவசாயிகளைக் கொதிப்படையச் செய்துள்ளனர். 

மேலும், இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்குத் தவெக அரசு தண்ணீர் திறந்துவிடாததால், டெல்டா மாவட்ட விவசாயிகளும், லட்சக்கணக்கான விவசாயத் தொழிலாளர்களும் வாழ்வாதாரத்தை முழுமையாக இழந்து நிற்கிறார்கள்.

இம்மாதம் 22-ஆம் தேதி நடைபெறவுள்ள காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில், கர்நாடகா ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் வழங்க வேண்டிய நிலுவைத் தண்ணீரை முழுமையாகப் பெற வேண்டும். அதற்கு, 'பொய்க்கால் குதிரை' போன்ற தவெக - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் முதலமைச்சர், காவிரி ஆணையக் கூட்டத்தில் உரிய முறையில் உறுதியான அழுத்தத்தைத் தந்து தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என எடப்பாடி கே. பழனிசாமி தனது அறிக்கையில் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: தண்ணீர் வாங்குற ஐடியா இருக்கா..? என்ன ஆக்ஷன் எடுத்தீங்க..? கேள்விகளால் துளைத்த கிருஷ்ணசாமி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share