கர்நாடகா திறப்பது வெள்ள நீர் வடிகால் மட்டுமே! முதலமைச்சர் விஜய்க்கு கி.வீரமணி கண்டனம்!
கர்நாடக அரசு காவிரியில் தண்ணீரை திறப்பது உச்சநீதிமன்ற ஆணையை மதிப்பதற்காக அல்ல தங்களின் பாதுகாப்பிற்கான வெள்ள நீர் வடிகாலாகவே என திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி தெரிவித்துள்ளார்.
கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்குத் திடீரெனத் தண்ணீரைத் திறந்துவிடுவது காவிரி மேலாண்மை வாரியத்தின் மீதோ அல்லது உச்சநீதிமன்றத்தின் மீதோ உள்ள மதிப்பால் அல்ல; தங்கள் அணை உடைந்து விடக்கூடாது என்பதற்காகக் கழிவுநீர்ப் பாதையைப் போலத் தண்ணீரைத் தமிழ்நாட்டிற்கு வெள்ள நீர் வடிகாலாகப் பயன்படுத்துவதற்கே! என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மிகக் காரசாரமான அறிக்கை வெளியிட்டுள்ளார். இன்று (ஆகஸ்ட் 3, 2026) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி நீர்ப் பங்கீடு மற்றும் கர்நாடக அரசின் பிடிவாதப்போக்கு குறித்துத் தனது ஆழந்த கண்டனங்களையும், தமிழ்நாடு அரசு உடனடியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவரித்துள்ளார்.
உச்சநீதிமன்ற உத்தரவின்படி தமிழ்நாட்டிற்கு ஆண்டுதோறும் வழங்க வேண்டிய 177.25 டி.எம்.சி. தண்ணீரை வழங்காமல் கர்நாடக அரசு ஏமாற்றி வருகிறது. காவிரி டெல்டா பகுதியில் குறுவைச் சாகுபடி பாதிக்கப்பட்டு லட்சக்கணக்கான விவசாயிகள் வாடிய பயிர்களைக் கண்டு ரத்தக் கண்ணீர் வடித்து வருகின்றனர். அடுத்த 15 நாட்களுக்குத் தினமும் 3,500 கன அடி நீர் திறக்கக் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும், அதை ஏற்க முடியாது எனப் பெங்களூருவில் கர்நாடக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய ஒருமனதாகத் தீர்மானித்துள்ளது.
கர்நாடகாவில் ஆளுங்கட்சியான காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகளான பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் (ஜேடிஎஸ்) உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும், முன்னாள் முதலமைச்சர்களான எடியூரப்பா, சதானந்த கவுடா, பசவராஜ் பொம்மை, சித்தராமையா, ஒன்றிய அமைச்சர்களான குமாரசாமி, ஷோபா என அனைவரும் தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் தரக்கூடாது என்பதில் ஒருமித்தக் குரலாக நிற்கின்றனர்.
இதையும் படிங்க: நீட் எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு: சென்னை உயர் நீதிமன்றத்தில் திராவிடர் கழகம் வழக்கு!
ஆனால், தமிழ்நாட்டிலோ புதிய அனுபவமற்ற தவெக அரசு, மற்ற அனைத்துக் கட்சிகளையும் கூட்டி ஒருமித்தக் கருத்திணக்கத்தை உருவாக்கத் தயங்குகிறது. மேகதாது அணை எதிர்ப்பு, காவிரி நீர்ப் பங்கீடு, வறட்சிக் காலப் பகிர்வு (Distress formula) குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி ஒருமனதாக முடிவு எடுத்து ஒன்றிய அரசுக்கும் கர்நாடகாவிற்கும் அறிவிக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் யோசனைகளை முதலமைச்சர் ஜோசப் விஜய் பிடிவாதமாக மறுத்து வருகிறார்.
முதலமைச்சர் ஜோசப் விஜய், கர்நாடகா சென்று அம்மாநில துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமாரைச் சந்தித்துப் பேச நேரம் கேட்டதும், பின்னர் 'இங்கே நிலைமை சரியில்லை, வராதீர்கள்' என அவர்கள் மறுத்ததும் தமிழ்நாட்டின் உரிமைக்கும் முதலமைச்சர் பதவிக்குமான மரியாதையைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. இந்த முயற்சி ஒரு மாபெரும் அரசியல் அறப்பிழையாகும்.
நாம்தான் வெள்ளத்தில் மூழ்கிவிடுவோம் என்பதால் தான் தண்ணீரைத் தேக்காமல் வெளியேற்றுகிறோம்' எனத் டி.கே. சிவகுமாரே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார். கபினி அணை உடையும் அபாயத்திலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ளவே தண்ணீரைத் திறக்கின்றனரே தவிர, இதில் மனிதாபிமானமோ சட்ட மரியாதையோ இல்லை என்பதை உணர வேண்டும்.
எனவே, இனியும் காலந்தாழ்த்தாமல், தமிழ்நாடு முதலமைச்சரும் அரசும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, தமிழ்நாட்டின் ஒன்றுபட்ட குரலை எதிரொலிக்க வேண்டும். வாடும் பயிர்களையும் விவசாயிகளையும் காப்பாற்ற உச்சநீதிமன்றத்தில் தீவிர சட்டப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என ஆசிரியர் கி.வீரமணி தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: கலைஞர் மு.கலைவாணன் படத்திறப்பு விழா: பெரியார் திடலில் கி.வீரமணி, கனிமொழி எம்பி நெகிழ்ச்சி உரை!