கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு பணி வழங்குவது அரசின் கொள்கை முடிவு!
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசுப் பணி வழங்குவது அரசின் கொள்கை முடிவு என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குக் கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்குவதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அனுமதி தேவையில்லை என்றும், அரசின் கொள்கை முடிவின் அடிப்படையிலேயே இப்பணிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குக் கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்கித் தமிழக அரசு உத்தரவிட்டது. இதனை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் கார்த்திகேயன் மற்றும் சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
வழக்கு விசாரணையின் போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் துணைச் செயலாளர் ஞானமூர்த்தி பதில் மனுவைத் தாக்கல் செய்தார். அதில், தமிழக அரசின் நிர்வாகச் சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக, கருணை அடிப்படையில் நியமிக்கப்படும் நபர்களின் பணிகளை முறைப்படுத்துவதற்காகத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திடமிருந்து ஒப்புதல் பெறுவதில் இருந்து விலக்களித்து 01.08.2018 அன்று அரசாணை எண்.100 பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, கருணை நியமனங்களுக்கு TNPSC அனுமதி தேவையில்லை எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: #BREAKING: அரசுப் பணி வழங்க தடையில்லை... CM விஜய்க்கு கிரீன் சிக்னல்..! ஹை கோர்ட் மதுரை கிளை உத்தரவு..!!
அதேபோல், தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறைச் செயலாளர் கே.எஸ். பழனிசாமி தாக்கல் செய்த பதில் மனுவில், பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது அரசின் திட்டமிட்ட கொள்கை முடிவாகும். இது அரசியலமைப்புச் சட்ட விதிகளுக்கு உட்பட்டே செயல்படுத்தப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.
விசாரணையின் போது மனுதாரர் தரப்பில், மாநிலத்தில் சுமார் 39 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றித் தவித்து வரும் நிலையில், போட்டித் தேர்வுகளுக்கு மில்லியன் கணக்கில் விண்ணப்பிக்கும் சூழலில் இத்தகைய நியமனங்கள் பாதிக்கின்றன என வாதிடப்பட்டது.
இதற்குப் பதிலளித்து அரசுத் தலைமை வழக்கறிஞர் வாதிடுகையில், மனுதாரர் தான் தேர்வுக்குத் தயாராகி வருவதாகக் கூறினாலும், இது பொதுநல வழக்கா அல்லது அவருக்குப் பணி கோரும் வழக்கா என்பதில் தெளிவில்லை. ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், மதுரை லீலாவதி கொலை வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கும் கூட அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது. 41 பேர் உயிரிழந்த இந்த பெரும் துயரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் துயரைத் துடைக்கும் நிவாரணமாகவே பணி வழங்கப்பட்டுள்ளது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையைத் தொடர்ந்து ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: மகளிருக்கு இலவச பயணம் இருக்கும் போது சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு ஏன் இல்லை? உயர் நீதிமன்றம் கேள்வி!