#BREAKING: சோகத்தில் மூழ்கிய கரூர்... உதவி எண்கள் அறிவிப்பு..!!
கரூர் விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்டோருக்கு உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவரும் நடிகருமான விஜயின் இன்றைய கரூர் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இதில் 8 குழந்தைகள், 16 பெண்கள் உள்ளிட்ட அப்பாவி மக்கள் பலியானது மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
மூச்சுத் திணறல் மற்றும் காயங்களால் பாதிக்கப்பட்ட பலர் கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரின் நிலைமை ஆபத்தானதாக இருப்பதாகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களின் அழுகுரல் பார்ப்போரைக் கலங்கடிக்கச் செய்திருக்கிறது.
இதையும் படிங்க: #BREAKING: பெருந்துயரத்தில் கரூர்..!! உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம்.. முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு..!!
கரூர்-ஈரோடு நெடுஞ்சாலையில் உள்ள வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் கூடியதால் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட பலர் மயக்கமடைந்தனர். விஜய் பேசி முடித்து வெளியேறிய பின்னர் கூட்டம் கலைவதற்கிடையே இந்தப் பேரழிவு வெளிப்பட்டது.
காவல்துறை விதித்த நிபந்தனைகளை தவெக தலைமை மீறியதே இதன் முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. சுற்றுச்சூழல் அனுமதி, போக்குவரத்து கட்டுப்பாடு, பாதுகாப்பு ஏற்பாடுகள் போன்றவை புறக்கணிக்கப்பட்டதாக முதற்கட்ட விசாரணை தெரிவிக்கிறது. சம்பவ நேரத்தில் 10 ஆயிரம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்ததால் நெரிசல் தீவிரமடைந்தது.
இந்நிலையில் கரூரில் ஏற்பட்ட விபத்தில் பாதிக்கப்பட்டோரின் விபரங்கள் குறித்து தெரிந்து கொள்ள, தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலக அவசர உதவி மைய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 04324 256306 மற்றும் 7010806322 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொண்டு விவரங்களை கேட்டறியலாம் என கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார். இதனிடையே கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை எடுத்துச்செல்ல, ஆம்புலன்ஸ்கள் காத்திருக்கின்றன.
இதையும் படிங்க: #BREAKING: சோகத்தில் மூழ்கிய கரூர்.. கேட்கும் மரண ஓலம்.. அரசியல் தலைவர்கள் இரங்கல்..!!