×
 

“கோவிந்தா... கோவிந்தா...” - கரூரில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கோயில் நில விவகாரம்... வெடித்தது நூதன போராட்டம்...!

கரூரில் கோயில் நிலவகாரம் தொடர்பாக பொதுமக்கள் சுவாமி இடம் மனு அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

கரூர் தான்தோன்றிமலை பகுதியில் உள்ள ஜெ.ஜெ. நகர் மற்றும் ரெங்கா கார்டன் பகுதிகளில் ஏராளமான குடும்பங்கள் நீண்ட காலமாக வசித்து வருகின்றனர். இந்நிலையில், அப்பகுதியில் உள்ள சர்வே எண் 297-க்குட்பட்ட நிலம், தான்தோன்றிமலை வெங்கட்ராமண சுவாமி திருக்கோவிலுக்குச் சொந்தமானது எனக் கூறி, அங்கு வசித்து வரும் பொதுமக்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பொதுமக்கள், தாங்கள் பல தலைமுறைகளாக அந்தப் பகுதியில் வசித்து வருவதாகவும், 1963 மற்றும் 1967ஆம் ஆண்டுகளில் செட்டில்மெண்ட் தாசில்தார் பிறப்பித்த உத்தரவுகளின் அடிப்படையில் தங்களுக்கு நில உரிமை இருப்பதாகவும் தெரிவித்தனர்.

பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் தங்களை தற்போது ஆக்கிரமிப்பாளர்கள் என குறிப்பிடுவது நியாயமற்றது என கூறி பொதுமக்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட நோட்டீஸை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினர்.

இதையும் படிங்க: கரூர் அரசுப்பணி விவகாரம்..! தவிக்கும் குடும்பங்கள்..!! வரும் 14ஆம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை..!!

இதனை வலியுறுத்தும் வகையில், பாதிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தான்தோன்றிமலை அருள்மிகு வெங்கட்ராமண சுவாமி கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். அப்போது  ‘கோவிந்தா... கோவிந்தா...’ என கோஷம் எழுப்பியபடி, சுவாமியிடம் மனு அளித்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தில் ஜெ.ஜெ. நகர் குடியிருப்போர் நலச்சங்கம், ரெங்கா கார்டன் குடியிருப்போர் நலச்சங்கம், அடிமனை பயனாளிகள் சங்கம், இனாம் நிலம் மீட்புக் குழு உள்ளிட்ட பல்வேறு குடியிருப்போர் நல அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

தாங்கள் நீண்ட காலமாக வசித்து வரும் நிலையில், ஆவணங்கள் மற்றும் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட அரசு உத்தரவுகளை முழுமையாக பரிசீலிக்காமல் ஆக்கிரமிப்பாளர்கள் என குறிப்பிடுவது நியாயமற்றது.

எனவே, நிலத்தின் உரிமை தொடர்பான அனைத்து ஆவணங்களையும், 1963 மற்றும் 1967ஆம் ஆண்டுகளில் பிறப்பிக்கப்பட்ட அரசு உத்தரவுகளையும் முழுமையாக ஆய்வு செய்து, தங்களுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸை திரும்பப் பெற்று, பிரச்சினைக்கு உரிய தீர்வு காண வேண்டும்.

மேலும், அறநிலையத்துறை தங்களை ஆக்கிரமிப்பாளர்கள் என குறிப்பிடும் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும். பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிட்டது போன்று, தங்களது குடியிருப்பு மற்றும் நில உரிமை தொடர்பான பிரச்சினையிலும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, தற்போதைய நடவடிக்கையை கைவிட வேண்டும் என தமிழக முதலமைச்சருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

 

இதையும் படிங்க: கரூர் கோரம்..! அரசு வேலையை எதிர்த்த வழக்கு..!! டி என் பி எஸ் சி பதிலளிக்க உத்தரவு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share