×
 

ஆணவ படுகொலை செய்யப்பட்ட கவின் உடல் ஒப்படைப்பு... மருத்துவமனையில் பலத்த பாதுகாப்பு!

ஐந்து நாட்கள் போராட்டத்திற்கு பிறகு ஆணவ படுகொலை செய்யப்பட்ட கவின் உடலை அவரது உறவினர்கள் பெற்றுக்கொண்டனர்.

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கவின்குமார். இவர் சென்னையில் தனியார் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில், விடுமுறைக்குச் சொந்த ஊருக்கு சென்றுள்ளார். அப்போது, தனது தாத்தாவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக நெல்லை கேடிசி நகர் பகுதியில் உள்ள சித்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளதாக தெரிகிறது.

சிகிச்சை முடிந்து, சொந்த ஊருக்குச் செல்வதற்காக இருவரும் சாலையில் நடந்து வந்துகொண்டிருந்தபோது, அவர்களை வழிமறித்த இளைஞர் அரிவாளை எடுத்து கவின்குமாரை வெட்ட துணிந்துள்ளார். அவரிடம் இருந்து தப்ப முயன்ற கவின், உயிரை கையில் பிடித்து ஓடியுள்ளார். இருப்பினும் கவினை அந்த இளைஞர் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துள்ளார். 

இதை அடுத்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தது சுர்ஜித் என்ற இளைஞர் கவின்குமாரை வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது. தன் சகோதரி உடன் நெருங்கி பழகியதால் ஆத்திரத்தில் இவ்வாறு செய்ததாகவும் வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் இவ்வாறு செய்ததாகவும் அந்த இளைஞர் சுர்ஜித் போலீசில் சரணடைந்து வாக்குமூலம் கொடுத்ததாக கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: கவினும் நானும் உயிருக்கு உயிரா காதலிச்சோம்! சுபாஷினியின் பரபரப்பு வீடியோ...

கவினின் கொலைக்கு பெண்ணின் பெற்றோர்கள் மறைமுகமாக தூண்டுதலாக இருந்ததாகவும், அவர்களது ஆதரவு இல்லாமல் இந்தக் கொலை நடந்திருக்க வாய்ப்பில்லை என்றும் கவினின் உறவினர்கள் குற்றம்சாட்டினர். இதனால், பெண்ணின் பெற்றோரையும் கைது செய்ய வேண்டும் என்றும், அவர்கள் காவல்துறையில் பணியாற்றுபவர்களாக இருப்பதால் அவர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தனர். 

இந்த நிலையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோர் இந்த வழக்கில் தங்கள் மகன் சுர்ஜித்துக்கு தூண்டுதலாக இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டு, பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். கவின் குமாரை வெட்டி படுகொலை செய்த சுஜித் என்ற இளைஞர் மீது குண்டத் தடுப்புச் சட்டம் பாய்ந்தது. பெண்ணின் தந்தை சரவணன் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனிடையே, கவின் குமார் ஆணவ படுகொலை வழக்கு சிபிசிஏடிக்கு மாற்றப்பட்டு இருந்த நிலையில் விசாரணை தொடங்கியது. நீதி கிடைக்கும் வரை கவின் குமாரின் உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் ஐந்து நாட்களாக போராடி வந்தனர்.

இந்த நிலையில் கவின் உடலை பெற்றுக் கொள்வதாக உறவினர்கள் ஒப்புக்கொண்ட நிலையில் அவரது தம்பி பிரவீன் உள்ளிட்ட உறவினர்கள் உடலை நெல்லை அரசு மருத்துவமனையில் இருந்து பெற்றுக்கொண்டனர்.

அப்போது கவின் உடலுக்கு அமைச்சர் கே.என். நேரு மாலை அணிவித்து இறுதி மரியாதை செலுத்தினார். இதன்பிறகு கவின் உடல் பலத்த பாதுகாப்புடன் அவரது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இதையும் படிங்க: காதலை கொன்னு புதச்சிடாதீங்க! ஆணவ படுகொலையை சுட்டிக்காட்டி சீமான் ஆதங்கம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share