×
 

மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனு.. கொளத்தூர் தேர்தல் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!!

எம்.எல்.ஏ.வின் வெற்றியை செல்லாது என அறிவிக்க தேர்தல் வழக்கு மட்டுமே தாக்கல் செய்ய முடியும் என்று வாதிடப்பட்டது. 

2026ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சந்தித்த தோல்வி தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. தமிழக வெற்றிக் கழக (தவெக) வேட்பாளர் வி.எஸ்.பாபு சுமார் 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இரண்டாவது இடத்தைப் பிடித்த ஸ்டாலின் தரப்பில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றம்சாட்டி மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட உடனேயே, மே 7ம் தேதி ஸ்டாலின் தரப்பு 14 வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் விவிபேட் (ஓட்டுக்கு ஒப்புகைச் சீட்டு) எந்திரங்களை சரிபார்க்க விண்ணப்பித்திருந்தது. ஆனால் இந்தச் சரிபார்ப்பு ஜூலை 29ம் தேதிக்குப் பிறகே தொடங்கியது. சரிபார்ப்பின் போது சில எந்திரங்கள் திடீரென கோளாறாகி நின்றுவிட்டதாகவும், ஆறு வாக்குச் சாவடிகளில் பல்வேறு முரண்பாடுகள் கண்டறியப்பட்டதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

இதன் அடிப்படையில் அனைத்து 286 எந்திரங்களையும் முழுமையாக சரிபார்க்கவும், விவிபேட் சீட்டுகளை 100 சதவீதம் எண்ணவும், பாபுவின் வெற்றியை செல்லாது என அறிவித்து தன்னை வெற்றியாளராக அறிவிக்கவும் ஸ்டாலின் தரப்பு கோரியிருந்தது. தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஸ்டாலின் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி வாதிட்டார். 

இதையும் படிங்க: பரபர பாலிடிக்ஸ்.. முப்பெரும் விழாவில் அதிரடி மூவ்!! 110 மாவட்ட பொறுப்பாளர்களை களமிறக்கும் மு.க.ஸ்டாலின்!

தேர்தல் முடிவுகள் வெளியான மூன்று நாட்களுக்குள்ளேயே சரிபார்ப்பு கோரப்பட்டதாகவும், ஆனால் தேர்தல் வழக்கு தாக்கல் செய்வதற்கான 45 நாட்கள் காலக்கெடுவுக்குப் பிறகே எந்திரங்கள் சரிபார்க்கப்பட்டதால், வழக்கு தாக்கல் செய்வதைத் தவிர வேறு வழியில்லை என அவர் வலியுறுத்தினார். தேர்தல் ஆணையம் தரப்பில், இந்தக் கோரிக்கைகள் விசாரணைக்கு உகந்தவை அல்ல என்றும், எம்.எல்.ஏ.வின் வெற்றியை செல்லாது என அறிவிக்க தேர்தல் வழக்கு மட்டுமே தாக்கல் செய்ய முடியும் என்றும் வாதிடப்பட்டது. 

மேலும், வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்ப்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளில் 2025ம் ஆண்டு திருத்தங்கள் கொண்டு வரப்பட்டதாக ஆணையம் சுட்டிக்காட்டியது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஸ்டாலினின் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். இதையடுத்து, வழிகாட்டு நெறிமுறைகளில் ஏற்பட்ட மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, தற்போதைய வழக்கைத் திரும்பப் பெற்று புதிய மனு தாக்கல் செய்ய ஸ்டாலின் தரப்பு அனுமதி கோரியது. 

நீதிபதிகள் இதற்கு அனுமதியளித்தனர். கொளத்தூர் தொகுதி நீண்டகாலமாக திமுகவின் கோட்டையாக இருந்த நிலையில், இந்தத் தேர்தலில் ஏற்பட்ட மாற்றம் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கின் மேலும் விசாரணை விரைவில் தொடர வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க: ஒளிமிகு எதிர்காலத்தை நோக்கிய நம் நாட்டின் பயணம் வெல்ல வேண்டும்.. மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share