கொஞ்சம் விட்ருந்தா மொத்தமும் போயிருக்கும்.. வானில் ஊசலாடிய 326 பேரின் உயிர்.. சாதுர்யமாக செயல்பட்ட பைலட்..!
சென்னையில் 326 பயணிகளுடன், தரையிறங்க வந்த துபாய்- சென்னை விமானத்தின் மீது திடீரென லேசர் ஒளி பாய்ந்ததால் பரபரப்பும் , பதற்றமும், அதிர்ச்சியும் ஏற்பட்டது.
துபாயிலிருந்து 326 பயணிகளுடன் சென்னைக்கு எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம், நேற்றிரவு சென்னை ஏர்போர்ட்டை நோக்கி வந்தது.. சிறிது நேரத்தில் ஏர்போர்ட்டில் தரையிறங்க வேண்டும் என்பதால், பறக்கும் உயரத்தை மெல்ல மெல்ல குறைத்தது.. இதனால் விமானம் தாழ்வாக பறந்தது.
அப்போது சென்னை பரங்கிமலை பகுதியில் இருந்து, பச்சை நிறத்தில் சக்தி வாய்ந்த லேசர் ஒளி விமானத்தின் மீது தொடர்ச்சியாக அடிக்கப்பட்டது. இதனால் சில வினாடிகள் விமானி நிலை குலைந்துபோனார். ஆனாலும் அடுத்த சில வினாடிகளில் சுதாகரித்துக் கொண்டு, தாழ்வாக பறந்து கொண்டிருந்த விமானத்தை மீண்டும் உயரத்துக்கு கொண்டு சென்றார்.
விமானம் உயரத்துக்கு போகும் வரை தொடர்ச்சியாக, 3 நிமிடங்களுக்கு லேசர் ஒளியை விமானத்தின் மீது ஆசாமிகள் அடித்துள்ளனர். விமானம் உயரத்துக்கு போனதும் லேசர் ஒளியை ஆசாமிகளால் தொடர்ந்து அடிக்க முடியவில்லை. உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு லேசர் லைட் வந்த திசைகுறித்து விமானி தகவல் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அத்துமீறும் போலீசார்! சந்தி சிரிக்கும் சட்டம் - ஒழுங்கு! முதல்வரை வெளுத்து வாங்கும் நயினார் நாகேந்திரன்..!
விமானத்தை தரையிறக்க விடாமல் யாரோ விஷமத்தனம் செய்கிறார்கள் என புகார் செய்தார். சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையில் உள்ள, ரேடார் சாதனங்கள் மூலம் அந்த லேசர் ஒளி எங்கிருந்து வருகிறது என அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதற்குள் லேசர் ஒளி நின்று விட்டது.
இதையடுத்து விமானத்தை சென்னை விமான நிலையத்தில் விமானி பத்திரமாக தரையிறக்கினார். இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபற்றி சென்னை பரங்கிமலை, நந்தம்பாக்கம், கிண்டி போலீஸ் நிலையங்களும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
அவர்களும் லேசர் ஒளியை அடித்தது யார்? என தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். விமானங்கள் மீது லேசர் ஒளியை அடிப்பது இது முதல்முறையல்ல. 2 ஆண்டுகளுக்கு முன் தொடர்ச்சியாக இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்தன.
இந்தப்பிரச்னை அப்போது பெரும்தலைவலியாக உருவெடுத்ததால் விமான போக்குவரத்துக்கு இடையூறு செய்யும் நபர்கள் குறித்து ஏதாவது தகவல் தெரிந்தால் பொதுமக்கள் அருகே உள்ள போலீஸ் நிலையத்திற்கு தெரியப்படுத்தலாம் என இந்திய விமான நிலைய ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.
விமான நிலைய போலீசாரும் அப்போது துரித கதியில் விசாரணை நடத்தி சென்னை பழவந்தாங்கல் மற்றும் பரங்கிமலை பகுதியை சேர்ந்த வட மாநில கட்டட தொழிலாளர்கள் 3 பேரை பிடித்து விசாரித்தனர். புதிதாக கட்டப்பட்டு வரும் உயரமான கட்டடத்தில் இருந்து அவர்கள் அடித்துள்ளது தெரிய வந்தது.
விளையாட்டாக அடித்து விட்டோம் என அவர்கள் மன்னிப்பு கேட்டனர். லேசர் லைட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் கடுமையாக எச்சரித்து அனுப்பினர். 2 ஆண்டுக்கு பிறகு மீண்டும் அதே போன்ற ஒரு சம்பவம் சென்னை விமான நிலையத்தில் மீண்டும் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே எச்சரித்து அனுப்பப்பட்ட வடமாநில தொழிலாளர்கள் எங்கிருக்கிறார்கள்? என போலீசார் தோண்டி துருவ ஆரம்பித்திருக்கிறார்கள். விமான நிலையம் அருகே உள்ள பகுதிகளில் உயரமான கட்டடங்களில் விழாக்கள் ஏதாவது நடந்திருக்கலாம். அங்கிருந்து விமானம் மீது லேசர் லைட்டை அடித்திருக்கலாம் என்பதால் நேற்று நடந்த விழாக்கள் பற்றியும் விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: இனி இந்தந்த விதிமீறல்களுக்கு மட்டுமே அபராதம்... சென்னை கமிஷனர் அதிரடி உத்தரவு..!