"10 வருஷம் ஜெயில்"..! தண்டனையை நிறுத்தி வைக்கணும்..! பேராசிரியர் நிர்மலாதேவி மனு..!!
தண்டனையை நிறுத்தி வைக்க கோரி பேராசிரியர் நிர்மலா தேவி மனு தாக்கல் செய்திருந்த நிலையில் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. விருதுநகர் மாவட்ட விரைவு நீதிமன்றம் வழங்கிய தண்டனையை நிறுத்தி வைக்க கோரி சிறையில் இருக்கும் பேராசிரியை நிர்மலா தேவி வழக்கு தொடர்ந்தார். அரசுத் தரப்பில், மூத்த வழக்கறிஞர் ஆஜராக கால அவகாசம் கோரிய நிலையில், வழக்கை செப்டம்பர் 21ம் தேதிக்கு ஒத்திவைத்து மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மதுரை பெண்கள் சிறப்பு சிறையில் தண்டனை கைதியாக உள்ள கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில், மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் " மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் விருதுநகர் மாவட்ட விரைவு நீதிமன்றம் 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் மொத்தமாக 2 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது. அரசுத் தரப்பு 82 சாட்சிகளை விசாரித்தது. ஆனால் சாட்சிகளுக்கு இடையே முறையான தொடர்பு இல்லை. முழு அரசு தரப்பு வழக்கும், ஊடக விசாரணை மற்றும் சிலரின் வாக்குமூலங்களை மட்டுமே சார்ந்துள்ளது.
அந்த வாக்குமூலங்கள் தொடர்பான எனது விளக்கம் முறையாக பரிசீலிக்கப்படவில்லை. விசாரணையின் போது ஜாமினில் இருந்த காலத்தில் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கினேன். அந்த அடிப்படையில் ஏற்கனவே நான் தாக்கல் செய்த தண்டனை நிறுத்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.ஏற்கனவே சிறை தண்டனை அனுபவித்து வரும் சூழலில் நான் கூறியுள்ள காரணங்களை பரிசீலித்து விருதுநகர் மாவட்ட விரைவு நீதிமன்றம் வழங்கிய தண்டனையை நிறுத்தி வைக்கவும், குற்றவியல் மேல்முறையீட்டு விசாரணை முடியும் வரை ஜாமின் வழங்கவும் உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இதையும் படிங்க: திரிணாமூல் எம்.பி மஹுவா மொய்த்ராவுக்கு கைது வாரண்ட்: மேற்கு வங்க நீதிமன்றம் அதிரடி!
இந்த வழக்கு நீதிபதி கார்த்திகேயன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில், மூத்த வழக்கறிஞர் ஆஜராக கால அவகாசம் கோரப்பட்டதையடுத்து, வழக்கை செப்டம்பர் 21ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். மேலும் அன்றைய தினம் வழக்கை என்றிலிருந்து விசாரிப்பது என்பது குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: தொடரும் மின்வெட்டு... CPM நிகழ்ச்சியில் சலசலப்பு..! பதில் அளிக்காமல் நழுவிய சண்முகம்..!!